த.வெ.க அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு கொடுத்துவருகின்றன கம்யூனிஸ்ட் கட்சிகள். ஆனால், கம்யூனிஸ்ட் கட்சியினர் பற்றிய விவரங்களை சேகரிக்குமாறு குஜிலியம்பாறை தாசில்தார் உத்தரவிட்டிருந்ததும், தமிழக உயர் கல்வித்துறை சார்பில், கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் மாணவர்கள் இணைந்து போராடுவதைத் தடுக்க அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பிய விவகாரமும் காம்ரேடுகளை கண் சிவக்க வைத்துள்ளது.
தொடர்ச்சியாக த.வெ.க அரசின் குறைபாடுகளை வெளிப்படையாக விமர்சித்துவருபவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினர் கே.சுப்பராயன். இந்தச் சூழலில், அவரிடம் நமது கேள்விகளை முன்வைத்தோம்…
“தமிழ்நாட்டில், அதிகாரிகளின் ஆட்சிதான் நடைபெறுகிறது என அண்மையில் விமர்சித்திருக்கிறீர்களே. எதை வைத்து இப்படி சொல்கிறீர்கள்?”
“அரசியல்வாதிகள்தான் அதிகார வர்க்கத்தை வழி நடத்த வேண்டும். ஆனால், நடக்கும் நிகழ்வுகளைப் பார்த்தால், அமைச்சர்கள் தீர்மானித்து எதுவும் நடப்பதாகத் தெரியவில்லை. அமைச்சர்கள் புதியவர்களாகவும், ஜூனியர்களாகவும் இருப்பதால், அதிகாரிகள்தான் அவர்களை வழிநடத்துகிறார்கள்.
குஜிலியம்பாறை விவகாரத்தில், எங்களுக்குத் தெரியாமல் அதிகாரி சுய விருப்பு வெறுப்பின் அடிப்படையில் அப்படியொரு சுற்றறிக்கையை வெளியிட்டுவிட்டார் என சட்டசபையிலேயே அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல் குமார் தெரிவிக்கிறார். அப்படியென்றால், இந்த அமைச்சரவையை அதிகாரிகள்தான் வழிநடத்துகிறார்கள் என்பதற்கு இதைவிட வேறு என்ன உதாரணம் வேண்டும்?”
“பரந்தூர் விமான நிலைய திட்டத்தை தமிழக அரசு ரத்து செய்துவிட்டது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தனது கருத்தை இதுவரை தெரிவிக்கவில்லையே ஏன்?”
“எந்தவொரு திட்டத்துக்கும் தரிசு நிலங்களை எடுத்துக்கொள்ளலாமே தவிர, விளைச்சல் நிலங்களை கையகப்படுத்தக் கூடாது என்பதுதான் கம்யூனிஸ்ட் கட்சிகளின் தெளிவான நிலை. ஏனெனில், விவசாய நிலப்பரப்பு என்பது குறைந்துகொண்டே வருகிறது.
எனவே, பரந்தூர் விமான நிலையத் திட்டத்துக்காக எடுக்கப்பட்டிருக்கும் விவசாய நிலங்களை திரும்பவும் விவசாயிகளிடமே ஒப்படைக்க வேண்டும் என்பதுதான் பொதுவான நிலை. மற்றபடி இந்த விவகாரத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு குறித்து இன்னும் நாங்கள் முடிவு செய்யவில்லை. எனவே, எங்கள் கட்சியின் மாநில செயலாளிரிடம் நீங்கள் கேட்பதுதான் பொருத்தமானதாக இருக்கும்.”
“அண்மையில், ‘அமைச்சர் ரமேஷின் ஆட்டம் எல்லை தாண்டிய பயங்கரவாதம்’ என உங்களது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தீர்களே… என்ன காரணம்?”
“சட்டமன்றத்திற்குள் முதல்வர் வரும்போது, எல்லோரும் எழுந்து நிற்க வேண்டும் என்று எந்தவொரு மரபும் இல்லை. எதிர்க்கட்சித் தலைவர் வந்தால், அவரது கட்சியைச் சார்ந்த எம்.எல்.ஏ-க்கள் எழுந்து நிற்பார்கள். அதேபோல், முதல்வர் வரும்போது ஆளுங்கட்சியினர் எழுந்து நிற்பார்கள். அவ்வளவுதான்.
நானும் இரண்டு முறை எம்.எல்.ஏ-வாக இருந்திருக்கிறேன். ஆனால், அமைச்சர் ரமேஷ், ‘முதல்வர் வரும்போது எழுந்து நிற்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவருக்குக் கற்றுக்கொடுங்கள்’ என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திடம் சொல்கிறார். இது என்ன மாதிரியான முறை?

சட்டமன்றத்தை வழி நடத்துவதற்கான விதிமுறைகளில், இதுபோல் ஏதாவது குறிப்பிடப் பட்டிருக்கிறதா? அப்படி எதுவும் இல்லாதபோது, அமைச்சர் ரமேஷ் தனது விசுவாசத்தைக் காட்ட எழுந்து நிற்கிறார். ஆனால், எல்லோரும் அதே மாதிரி விசுவாசம் காட்ட வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கக்கூடாது. ஆக, அமைச்சர் ஒருவரே இதுபோன்று விவரக் குறைவான விஷயத்தை பகிரங்கமாக அதிக சத்தத்துடன் சொன்னதைத்தான் சோஷியல் மீடியாவில் பதிவு செய்திருந்தேன்.”
“தி.மு.க ஆதரவு மனநிலையில் நீங்கள் இருப்பதால்தான் தொடர்ச்சியாக த.வெ.க அரசை விமர்சித்து வருவதாக குமுறுகிறார்களே?”
“ஒரு கம்யூனிஸ்ட் என்பவன் முறைகேடு, அநியாயங்களுக்கு எதிராகத்தான் செயல்படுவான். அந்தவகையில், எங்கள் கட்சியின் எல்லைக்குள் நின்றுதான் நான் விமர்சனங்கள் செய்துவருகிறேன்.
பா.ஜ.க -ஆர்.எஸ்.எஸ்-ஸை எதிர்ப்பதுதான் எங்கள் அரசியல். அந்தவகையில், தமிழ்நாட்டிலும் எந்தக் கட்சி பா.ஜ.க-வை அல்லது ஆர்.எஸ்.எஸ்-ஸை ஆதரிக்கிறதோ அவர்களும் எங்களுக்கு எதிர்க்கட்சியினர்தான். பா.ஜ.க – ஆர்.எஸ்.எஸ்-ஸை எதிர்ப்பவர்கள் எங்கள் நேச சக்திகள். இதுதான் எங்கள் அளவுகோல்.
அதனால்தான், தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக் கூட்டணியின் தலைவராக இருந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை ‘முதல்வராக்க வேண்டும்’ என்றதொரு சூழல், 2026 தேர்தலுக்குப் பிறகு உருவானபோது, அதைத் தீவிரமாக நாங்கள் எதிர்த்து நிராகரித்தோம். எனவே தி.மு.க-வோ அல்லது த.வெ.க-வோ எதிர்க்க வேண்டிய விஷயத்தில் எதிர்ப்போம்; ஆதரிக்க வேண்டிய விஷயத்தில் ஆதரிப்போம்!”
“த.வெ.க அரசின் செயல்பாடுகள் குறித்து அதிருப்தி தெரிவிக்கிற நீங்கள், கூட்டணிக் கட்சி என்ற அடிப்படையில் முதல்வரையே நேரில் சந்தித்து முறையிட்டிருக்கலாமே?”
“திருப்பூர் தொகுதி பிரச்னைகளுக்காக முதல்வரை நேரில் சந்திக்க நேரம் கேட்டு, இதுவரையிலும் மூன்று முறை அதிகாரபூர்வமாக நான் கடிதம் அனுப்பியிருக்கிறேன். ஆனாலும் நோ ரெஸ்பான்ஸ்!”
“இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், தலைவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து முதல்வரை நேரில் சந்தித்திருக்கலாமே?”
“திருப்பூர் தொகுதி எம்.பி என்ற வகையில், தொகுதி மற்றும் மாவட்டத்தில் நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டிருக்கும் திட்டங்கள் குறித்து விரிவான கடிதத்தை முதல்வருக்கு அனுப்பியிருக்கிறேன்.
ஜவஹர்லால் நேரு காலத்திலிருந்தே, மக்களவை உறுப்பினர்கள் அமைச்சர்களில் ஆரம்பித்து பிரதமர் வரையில் யாருக்குக் கடிதம் எழுதினாலும் அதற்கான பதில் கடிதம் சம்பந்தப்பட்டவர்களின் கையெழுத்திட்டு வரும். இப்போதுவரை இதுதான் நடைமுறையில் இருக்கிறது. ஆனால், இங்கே நான் பல கடிதங்கள் அனுப்பிவிட்டேன். ‘இது பரிசீலனையில் இருக்கிறது’அல்லது ‘ஆய்வில் இருக்கிறது.’

அல்லது ‘முடியாது’ என்றோ என் கடிதத்துக்கு பதில் கொடுத்திருக்கலாம். ஆனால், எந்தவித ரெஸ்பான்ஸுமே கொடுக்கவில்லை. அப்பாயின்மென்ட்டும் கிடைக்கவில்லை. எனவே இப்போது நான் அப்பாயின்மென்ட்டும் கேட்பதில்லை! முதல்வர் மட்டுமல்ல… தமிழக அமைச்சர்களிடமிருந்தும்கூட எந்தவித பதிலும் கிடைப்பதில்லை!”
“ஜனநாயக போராட்டங்களை ஒடுக்குகிற வேலையை த.வெ.க ஆட்சி தொடருமானால், ஆட்சிக்கான ஆதரவை மறு பரிசீலனை செய்யவேண்டிவரும் என அண்மையில் பெ.சண்முகம் தெரிவித்திருப்பது மிரட்டலாக இருக்கிறதே?”
“இதுகுறித்து நீங்கள் பெ.சண்முகத்திடம்தான் கேட்கவேண்டும். அதேசமயம், எங்கள் கட்சி இந்த விவகாரம் குறித்து இன்னும் விவாதிக்கவில்லை.
பொதுவாக, ‘நல்லாட்சி நடைபெற வேண்டும்’ என்ற நம்பிக்கையிலும் நல்லெண்ணத்திலும்தான் கம்யூனிஸ்ட்டுகள் த.வெ.க அரசுக்கான ஆதரவை வழங்கிவருகிறார்கள். ஆனால், அந்த நம்பிக்கைக்கு உரியபடி நடக்காதபோது, ஆட்சியாளர்களை எச்சரிக்க வேண்டியதும் அரசியல் ரீதியாக சரியான ஒன்றுதான்.”
























