உரையின் உள்ளடக்கத்தையும் மிக முக்கியமாக கவனிக்க வேண்டும். முதல்வர் விஜய் பேசும்போதெல்லாம் ஊழல், லஞ்சமற்ற நேர்மையாளர்களாக தங்களை அடையாளப்படுத்திக் கொள்கிறார். ஆனால், நேர்மை என்பது ஊழல் லஞ்சம் சார்ந்தது மட்டுமல்ல. அரசியல் நேர்மையும் பேசும் பேசுக்கு உண்மையாக இருக்கும் கருத்தியல் நேர்மையும் கூட முக்கியமானதுதான்.
“திமுக எதிர்ப்பு’ என்கிற ஒரே யுக்தியை மட்டும்தான் விஜய் தேர்தல் பிரசாரங்களில் பயன்படுத்தினார். அதிமுகவை பற்றி அவர் பேசவே இல்லை. அது தேர்தல் யுக்தி. ஆனால், அதே பார்முலாவை விஜய் சட்டமன்றத்துக்கும் கொண்டு வருகிறார். முதல்வர் கையில் வைத்திருக்கும் காவல்துறையின் மானியக் கோரிக்கை மீது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மட்டும் கேள்விகளை அடுக்கவில்லை.
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் கேள்வி எழுப்பியிருக்கிறார். ஆனால், முதல்வரின் பதிலுரையில் ஒரு இடத்திலும் எடப்பாடி பழனிசாமியின் கேள்விகளுக்கு பதிலே இல்லை. முழுக்க முழுக்க திமுகவை நோக்கியதாக மட்டுமே முதல்வரின் பேச்சு இருந்தது. கடந்த 50 ஆண்டுகளில் ஊழல் மலிந்துவிட்டது. தமிழகம் சீரழிந்துவிட்டது என்பது முதல்வர் விஜய்யின் வாதம். கடந்த 50 ஆண்டுகளில் திமுகவை விட அதிமுகதான் தமிழகத்தை அதிக ஆண்டுகளுக்கு ஆட்சி செய்திருக்கிறது. அப்படியிருக்க அதிமுகவை பற்றி எதையும் பேசாமல் திமுகவை நோக்கி மட்டுமே குண்டுகளை பாய்ச்சுவது எப்படி அரசியல் நேர்மையாக இருக்க முடியும்?
























