மகாராஷ்டிராவில் மராத்தா இட ஒதுக்கீடு கோரி போராட்டம் நடத்தி வருபவர் மனோஜ் ஜராங்கே பாட்டீல். ஏற்கனவே பல முறை இதற்காக உண்ணாவிரதம் இருந்துள்ளார்.
தற்போது மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். தற்போது மனோஜ் ஜராங்கே மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மனோஜ் ஜராங்கே மற்றும் அவரது கூட்டாளிகள் சிலருக்கு எதிரான ஊழல் புகாரை சமூக ஆர்வலர் அஜய் பரஸ்கர் அமலாக்கத் துறையிடம் அளித்துள்ளார்.
மனோஜ் ஜராங்கேவுக்கு சட்டவிரோத மணல் கடத்தலில் தொடர்பு இருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ள பரஸ்கர், ஜராங்கேயிக்கு நெருக்கமான சிலர் சேர்த்துள்ள சொத்துகள் குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டுகள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. ஜராங்கே தனது உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்து வரும் நிலையில் இந்தப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 14வது நாளாக இட ஒதுக்கீடு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மனோஜ் ஜராங்கே மும்பை நோக்கி பேரணி செல்வதற்கான தனது திட்டத்தை வகுத்திருக்கும் நிலையில் இந்தப் புகார் எழுந்துள்ளது.
ரூ.1000 கோடி அளவுக்கு ஊழல் செய்திருப்பதாக பரஸ்கர் அமலாக்கப்பிரிவிடம் புகார் செய்துள்ளார்.

அவர் அளித்த பேட்டியில், “‘நாங்கள் 2006-ஆம் ஆண்டு முதல் மராத்தா இட ஒதுக்கீட்டிற்காகப் பணியாற்றி வருவதாகக் கூறிய பரஸ்கர், கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தின் பெயரால் ஊழலும் நிலையற்றதன்மையும் நிலவுவதாகவும் குற்றம்சாட்டினார்.
ஜராங்கே மற்றும் அவருடன் தொடர்புடைய பலருக்கு எதிராக அமலாக்கத்துறையிடம் முறைப்படி புகார் அளித்துள்ளேன்” என்று அவர் தெரிவித்தார்.
பரஸ்கரின் புகாரில் ஜாரங்கேயின் கூட்டாளிகளாக அவரது மைத்துனர் விலாஸ் கேத்கர், பாண்டுரங் தாரக், கிஷோர் பலாண்டே, கங்காதர் கல்குடே, ஸ்ரீராம் குராங்கர், சஞ்சய் கட்டாரே, ஸ்வப்னில் தார், பத்ரிநாத் தாரக் ஆகியோர் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.
பரஸ்கர், இது தொடர்பாக எந்த விவரங்களையும் வழங்காமல், சட்டவிரோத மணல் கடத்தலில் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அரசாங்கம் வழங்கிய இடஒதுக்கீட்டிற்கு மராத்தா சமூகத்தின் முயற்சிகளே காரணம் என்று கூறிய பரஸ்கர், இதில் ஜராங்கேயின் பங்களிப்பு என்னவென்றும் கேள்வி எழுப்பினார்.
ஜராங்கே மேற்கொண்டு வரும் உண்ணாவிரதப் போராட்டம் குறித்து கூறுகையில், இந்தப் போராட்டம் மீண்டும் மீண்டும் ஒரு கிளர்ச்சி நடவடிக்கையாகப் பயன்படுத்தப்படுவதாக பாரஸ்கர் குற்றம் சாட்டினார்.























