இயக்குநரும் கவிஞருமான லிங்குசாமி, இயக்குநராக அறிமுகமான “ஆனந்தம்’ படம் வெளியாகி இன்றோடு 25 ஆண்டுகள் ஆகின்றன. கடந்த 2001ம் ஆண்டின் மே மாதம் 25ம் தேதி அன்று ‘ஆனந்தம்’ வெளியானது.
சூப்பர் குட் ஆர்.பி.சௌத்ரியின் தயாரிப்பில் மம்மூட்டி, முரளி, அப்பாஸ், ரம்பா, தேவயானி, சினேகா எனப் பெரிய நட்சத்திரப் பட்டாளத்தோடு அழகான குடும்பக் கதையாக ‘ஆனந்தம்’ வெளியாகி இருந்தது.

தமிழ் சினிமாவில் கூட்டுக் குடும்பக் கதைகளில் தனி இடத்தைப் பிடிக்கும் படங்களில் ‘ஆனந்தம்’ உண்டு. இந்தப் படத்தின் மூலம் அறிமுகமான லிங்குசாமி நம்மையும் அந்தக் கூட்டுக்குடும்பத்தில் ஒருவரான உணரவைத்திருப்பார்.
`திருப்பதி குடும்பம்’ என்று ஊரே மரியாதையோடு அழைக்கும் ஒரு கூட்டுக் குடும்பத்தின் சுகதுக்கங்களில் படம் பார்ப்பவர்களையும் பங்குபெறச் செய்திருந்தார். மொத்த படத்தையும் மம்மூட்டி தன் தோளில் தூக்கிச் சுமந்திருப்பார்.
“மக்கள் ரெண்டு பேர்கிட்டதான் தராசு கொடுத்திருக்காங்க. ஒருத்தர் நீதிபதி, மற்றொருத்தர் நம்மளைப்போல வியாபாரி” என்ற பிருந்தா சாரதியின் மின்னல் தெறிக்கும் வசனங்களும் பலம் சேர்த்தன.

இன்று 25 ஆண்டைக் கொண்டாடும் ‘ஆனந்தம்’ குறித்து லிங்குசாமியிடம் பேசினோம். “தமிழ் சினிமாவுக்கு 43 கலைஞர்களை அறிமுகப்படுத்தின ஆர்.பி.சௌத்ரி என்கிற மகா கலைஞன்தான் என்னையும் அறிமுகம் செய்து வைத்தார்.
என்னுடைய வாழ்க்கையில் எனக்கு கிடைத்த புகழ், சந்தோஷம், வாழும் வாழ்க்கை, என்னோட சாப்பாடு எல்லாத்தையும் அந்த மகா குருவுக்குத்தான் அர்ப்பணிக்கறேன். அவர்கிட்ட கதை சொல்லப்போன சந்திப்பில் இருந்து அதன் பிறகு அவருக்கும் எனக்குமான எல்லா நினைவுகளையும் பொக்கிஷமாக ஞாபகம் வச்சுக்குவேன்.

‘ஆனந்தம்’ கதையைச் சொல்லி முடிச்சதும் அவர் என்கிட்ட ‘இந்தக் கதையை எத்தனை நாள்கள்ல எடுப்பீங்க?’னு கேட்டார். நான் புதுசுங்கறதால ஷூட்டிங் நாள்கள் எனக்கு சரியான கணிக்க தெரியாமல் 60 நாட்கள்ல முடிச்சிடுவேன் சார்னு சொன்னேன். ஏன்னா, அப்ப ஃபிலிம்லதான் ஷூட் செய்வாங்க. ஆனா, குறிப்பிட்ட நாள்களைத் தாண்டியும் படப்பிடிப்பு முடியல. இன்னும் பல நாள்கள் ஷூட்டிங் நடந்த வேண்டியிருந்தது.






















