தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள ஈராச்சி கிராமத்திலுள்ள பரிமேழலகர் இந்து நடுநிலைப்பள்ளியின் நூற்றாண்டு விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்திதான் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் வேட்பாளர் எனக் கூறி வருகிறோம்.
அதுதான் எங்களது நிலைப்பாடு. பிரதமர் மோடியை எதிர்க்கும் சக்தியாக ராகுல் காந்தி உள்ளார். நீட் தேர்வு தொடர்பாக நடைபெற்ற போராட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்று, பிரதமர் மோடியின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி அந்தப் பிரச்னையை மத்திய அரசின் கவனத்திற்குக் கொண்டு வந்தார். நாடாளுமன்றத்தில் நீட் தேர்வு தொடர்பாக விவாதம் நடத்த வலியுறுத்தினார்.
ராகுல் காந்தியைப் பேச விடாமல் தடுத்த போதிலும் விடாமுயற்சியுடன் போராடி அந்தப் பிரச்னையை நாடாளுமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்தோம்.
த.வெ.கவினர் அவர்களின் கருத்துக்களையும் விருப்பங்களையும் தெரிவித்து வருகின்றனர். அது அவர்களது கருத்து. எங்களைப் பொருத்தவரையில் வரும் 2029 நாடாளுமன்றத் தேர்தலில் ராகுல் காந்தியை பிரதமராக்குவதே ஒட்டுமொத்த காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் விருப்பமாக இருக்கும்.

மோடி அரசின் செயல்பாடுகளைப் பற்றி மக்கள் அனைவருக்குமே தெரியும். குறிப்பாக நீட் தேர்வு விவகாரத்தில் என்னென்ன நடந்துள்ளது என்பதும் மக்களுக்குத் தெரியும். இளைஞர்களுக்கான ஆட்சி வேண்டும், மக்களுக்கான ஆட்சி வேண்டும் என்றால் அதனை ராகுல்காந்தியால் மட்டுமே வழங்க முடியும்” என்றார்.
























