Tamil Nadu Global Investors Meet 2024: உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் அடுத்த 20 ஆண்டுகளுக்கான வளர்ச்சிக்கு அடித்தளமிடப்பட்டுள்ளது என, முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் ஸ்டாலின் உரை:
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “உலகமே வியக்கும் வகையில் முதலீட்டாளர் மாநாடு நடத்தி இதயத்தில் இடம்பிடித்து விட்டார் அமைச்சர் டிஆர்பி ராஜா. திமுக ஆட்சி அமைந்த 2 ஆண்டுகளில் 27 தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டுள்ளன. 44 தொழிற்சாலைகளுக்கு அடிக்கல் நாட்டியுள்ளேன். இந்நிலையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம், தமிழ்நாட்டின் அடுத்த 20 ஆண்டுகளுக்கான வளர்ச்சிக்கு அடித்தளமிடப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் இறுதி செய்யப்பட்டுள்ள தொழில் முதலீடுகளுக்கான ஒப்பந்தங்கள் மூலமாக, முன் எப்போதும் இல்லாத வகையில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. மொத்தமாக, 6 லட்சத்து 64 ஆயிரத்து 180 கோடி ரூபாய் முதலீடாக ஈர்க்கப்பட்டுள்ளது. இதனை இந்தியாவே உற்றுநோக்கும் அவையில் பெருமகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன். இந்த திட்டங்கள் மூலம் நேரடி வேலை வாய்ப்பு என்ற வகையில் 14 லட்சத்து 54 ஆயிரத்து 712 நபர்களுக்கும், மறைமுகமாக 12 லட்சத்து 35 ஆயிரத்து 945 நபர்களுக்கும் என, மொத்தமாக 26 லட்சத்து 90 ஆயிரத்து 657 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்” என பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.