<p><strong>விழுப்புரம்:</strong> உலக பிரச்திபெற்ற மேல்மலையனுார் அங்காளம்மன் கோவில் தேர்திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.</p>
<p><strong>மேல்மலையனுார் அங்காளம்மன் மாசித் தேரோட்டம்&nbsp;</strong></p>
<p>விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள மேல்மலையனுார் அங்காளம்மன் கோவில் மாசி திருவிழா கடந்த 8ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 9ம் தேதி மயானக்கொள்ளை, 12ம் தேதி தீமிதி உற்சவம் நடந்தது. இன்று மாலை 3:00 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி தொடங்கியது. மேல்மலையனுார் அங்காளம்மன் கோவில் ஸ்தல புராணத்தின் படி மயானக்கொள்ளையன்று விஸ்வரூபம் எடுக்கும் அங்காளம்மனை சாந்தப்படுத்த தேவர்கள் அனைவரும் தேரின் பாகங்களாக இருந்து அம்மனுக்கு தேர் திருவிழா நடக்கிறது. இந்த பாரம்பரியத்தின் படி ஒவ்வொரு ஆண்டும் புதிய தேர் வடிவமைத்து தேர் திருவிழா நடத்தி வருகின்றனர். இந்த ஆண்டு விழாவிற்காக கடந்த ஒரு மாதம் முன்பு பச்சை மரங்களை கொண்டு புதிய தேர் கட்டும் பணி துவங்கி நடந்து வந்தது.</p>
<p><strong>தங்க கவசத்தில் அங்காளம்மன்&nbsp;</strong></p>
<p>தேரோட்டத்தினை முன்னிட்டு அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு, கருவறையில் உள்ள அம்மனுக்கும், சிவபெருமானுக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, தங்க கவச அலங்காரத்தில் அருள்பாலித்தனர்.&nbsp; பின்னர் உற்சவ அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, அலங்கரிக்கப்பட்ட தேரில் வைக்கப்பட்டு கோவிலின் வடக்கு வாயிலிருந்து பம்பை – உடுக்கை, மேளதாளங்கள் முழங்க&nbsp; தேருக்கும் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா, அங்காளம்மனே என பக்தி கோ&zwnj;&zwnj;ஷங்களை எழுப்பியபடி தேரை வடம் பிடித்து இழுத்தனர்.&nbsp; பக்தர்கள் வெள்ளத்தில் தேர் அசைந்தாடி வந்த போது, பக்தர்கள் சிலர் தங்களது வயலில் விளைந்த மணிலா, நெல், காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவைகளை தேரின் மீது வீசி நேர்த்திக்கடன் செலுத்தினர்.</p>
<p><strong>பாதுகாப்பு பணியில் காவல்துறை&nbsp;</strong></p>
<p>தேரோட்டத்தில் விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சார்ந்தவர்களும், பிற மாநிலத்தவர்களும் கலந்து கொண்டனர்.&nbsp; விழாவையொட்டி பக்தர்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. தேரோட்டத்தினை முன்னிட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.</p>

Source link


Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports