காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கான திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கையை கர்நாடக அரசு தயாரித்து மத்திய அரசிடம் தாக்கல் செய்திருக்கிறது. உரிய அனுமதிகளை பெற்று அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் புதிய அணைக்கு அடிக்கல் நாட்டப்படும் என அந்த மாநில அரசு தெரிவித்திருக்கிறது. இந்நிலையில் இது தொடர்பாக அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
அந்த அறிக்கையில், ” மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு இவ்வளவு தீவிரம் காட்டும் நிலையில் தமிழக அரசு இனியும் அலட்சியம் காட்டக்கூடாது. மத்திய நீர்வள அமைச்சகத்திடம் கர்நாடக அரசு தாக்கல் செய்துள்ள திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கையில், மத்திய அரசால் ஏற்கனவே சுட்டிக்காட்டப்பட்ட தொழில்நுட்ப அடிப்படையிலான சில திருத்தங்கள் மட்டுமே செய்யப்பட்டுள்ளனவே தவிர, அணையின் கொள்ளளவு, நீர்த்தேக்கப்பகுதி ஆகியவற்றில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதனால் தமிழகத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் ஏற்படும் பாதிப்புகள் குறைய வாய்ப்பில்லை.
புதிய விரிவான திட்ட அறிக்கையின்படி மேகதாது அணையின் கொள்ளளவு 67 டி.எம்.சியாக இருக்கும்; அதில் 4.75 டி.எம்.சி மட்டும் பெங்களூர் நகரின் குடிநீர் தேவைக்காக பயன்படுத்தப்படும்; 400 மெகாவாட் மின்திட்டம் செயல்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அணை கட்டி முடிக்கப்பட்டால் 12,500 ஏக்கர் வனப்பகுதி நீர்த்தேக்கப்பகுதியாக மாற்றப்பட்டு மூழ்கடிக்கப்படும். அணை கட்டப்படும் பகுதிகளில் உள்ள 8 லட்சத்து 90 ஆயிரம் மரங்கள் வெட்டி வீழ்த்தப்படும் என்றும் திட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேகதாது அணை கட்டப்பட்டால், மிகமோசமான சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்படும்; 12,500 ஏக்கர் பரப்பளவிலான காவிரி வனவிலங்கு சரணாலய நிலப்பகுதி நீரில் மூழ்கும். யானைகள், புலிகள், பறவைகள் வாழிடம் அழியும்; அதனால் வனவிலங்குகள் உள்ளிட்ட அரிய வகை விலங்குகள் அழியும்; பல மலைவாழ் கிராமங்கள் மூழ்கும்; இது ஒரு மாபெரும் சூழலியல் பேரழிவாக அமையும் என்று பல ஆண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி எச்சரித்து வந்தது. அது உண்மை என்பது புதிய விரிவான திட்ட அறிக்கை மூலம் மீண்டும் உறுதியாகி உள்ளது.
























