<p style="text-align: justify;"><strong>விழுப்புரம்:</strong> பிரதமர் மோடி தமிழக வெள்ள பாதிப்புகளை பார்வையிடுவதற்கு வராமல், இதுவரை ஒரு பைசா கூட வெள்ள நிவாரண நிதி தராமல் தற்போது அடிக்கடி தமிழகம் வருவதற்கு காரணம் மோடிக்கு தமிழ்நாடு மீது பாசம் கிடையாது வெறும் வேஷம் என உயர்கல்விதுறை அமைச்சர் பொன்முடி குற்றம்சாட்டியுள்ளார்.</p>
<p style="text-align: justify;">விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணி கட்சிகளின் சார்பில் விடுதலை சிறுத்தை கட்சியின் வேட்பாளர் ரவிக்குமார் எம்.பி போட்டியிடும் நிலையில், வானூர் சட்டமன்றத் தொகுதிக்கான வேட்பாளர் அறிமுகம் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் வானூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகளை சார்ந்த தலைவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். &nbsp;</p>
<p style="text-align: justify;"><strong>கூட்டத்தில் பேசிய உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி…</strong></p>
<p style="text-align: justify;">தமிழகத்தின் திராவிட கொள்கை தற்போது வடமாநிலங்களில் பரவிக்கொண்டிருப்பதற்கு காரணமானவர் முதல்வர் மு.க.ஸ்டாலின். இந்தியா கூட்டணி உருவாவதற்கு காரணமானவர் முதல்வர் ஸ்டாலின்தான். ஆனால் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கும் வகையில் மோடி அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதற்கு உதாரணம் குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் ஒரே நாடு ஒரே தேர்தல் என்றார்.&nbsp;</p>
<p style="text-align: justify;">தொடர்ந்து பேசிய அமைச்சர், மோடிக்கு தமிழ்நாடு மீது பாசம் கிடையாது வெறும் வேஷம். தமிழகத்தில் மழை வெள்ளத்தை பார்வையிட மோடி வரவில்லை. தமிழகத்தில் வெள்ள பாதிப்புக்கு இதுவரை ஒரு பைசா கூட நிதி கொடுக்காதவர் மோடி. மோடி அரசு மதவெறியை தூண்டிவிட்டு அரசியல் செயல்கின்றனர். இந்தியாவிலேயே ஆண்களைவிட பெண்கள் அதிகம் படிக்கும் மாநிலம் தமிழ்நாடு. எல்லோரும் படிக்க வேண்டும். எல்லோரும் வேலைக்கு போக வேண்டுமென்பதுதான் திராவிட மாடல். திராவிட மாடலை பெரியார், அண்ணா, கலைஞர் வழியில் நடைமுறைப்படுத்தி வருபவர் முதல்வர் ஸ்டாலின்.</p>
<p style="text-align: justify;">தமிழக முதல்வர் செய்து வரும் சாதனைகளை சொல்லி வாக்குகளை சேகரிக்க வேண்டும். விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் எதிர்கட்சி வேட்பாளர்களை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும். 400 க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற தொகுதிகளில் இந்தியா கூட்டணி வெற்றிபெறும் என்றார். இந்தக் கூட்டத்தில் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் பொன். கௌதமசிகாமணி, சட்டமன்ற உறுப்பினர்கள் புகழேந்தி, டாக்டர் லட்சுமணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p>

Source link


Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed