<p dir="ltr">குறும்படங்கள் சினிமாவுக்குள் வருவதற்கான நுழைவுச் சீட்டுகளாக பார்க்கப்படுகின்றன. இந்த நம்பிக்கையை இன்னும் உறுதிப்படுத்திய ஒரு நிகழ்ச்சி நாளைய இயக்குநர். குறைவான நேரத்திற்கு ஒரு கதையை சுவாரஸ்யமாக சொல்லி முடிக்க வேண்டிய சவாலை இந்த நிகழ்ச்சி போட்டியாளர்களுக்கு வழங்கியது.&nbsp; ஒரு படத்தை சுவாரஸ்யமானதாக மாற்ற சில வழிமுறைகளை இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்கள் பயன்படுத்தினார்கள். முதலாவது , வழக்கமான கதைகளை தவிர்த்து ஏதோ ஒரு வகையில் எதார்த்தத்தை மீறிய ஒரு கதைக்களத்தை அவர்கள் தேர்வு செய்தார்கள். இன்னொன்று யாரும் எதிர்பார்க்காத ஒரு ட்விஸ்ட்டை படத்தில் கடைசியில் வைத்து பார்வையாளர்களுக்கு ஒரு பேரிய அதிர்ச்சியை கொடுப்பதன் மூலம் தங்கள் கதைகளை சுவாரஸ்யமாக்கினார்கள்.</p>
<p dir="ltr">ஆனால் இந்த இயக்குநர்கள் பெரும்பாலான நேரங்களில் ஒன்லைன்களை மட்டுமே வைத்து 3 மணி நேரம் படத்தை ஒப்பேற்றுபவர்களாக மாறிவிடுகிறார்கள்.&nbsp;</p>
<p dir="ltr">கார்த்திக் சுப்பராஜின் பெரும்பாலான படங்கள் இந்த பொதுவான அம்சங்களை கொண்டிருக்கின்றன. அதே நேரத்தில் சுவாரஸ்யத்தை மையப்படுத்தி நகரும் இந்த மாதிரியான கதைசொல்லலில் இருக்கும் போதாமைகளை உணர்ந்து அதை மீறும் எத்தனமும் கார்த்திக் சுப்பராஜின் படங்களில் நாம் பார்க்கலாம்.</p>
<p dir="ltr">&rdquo;பலவிதமான பொய்களில் வழியாக ஒரு உண்மையைக் கண்டடைவதே சினிமா" என்று ஃபிரெஞ்சு இயக்குநர் மைக்கல் ஹெனக்கேவின் புகழ்பெற்ற வரி ஒன்று இருக்கிறது. இந்த கூற்றுக்கு மிக பொருத்தமான ஒரு உதாரணம் கார்த்திக் சுப்பராஜின் முதல் படமான பீட்சாவை சொல்லலாம். பீட்சா மற்றும் ஜிகர்தண்டா&nbsp; ஆகிய இரு படங்களும் கமர்ஷியல் சினிமாவிற்கு தேவையான கச்சிதமான திரைக்கதைகளைக் கொண்ட படங்கள்.&nbsp;</p>
<p dir="ltr">ஆனால் கே.எஸ் இதோடு தன்னை நிறுத்திக்கொள்ளாமல் இறைவி படத்தை இயக்கினார். இறைவி, மெர்குரி மாதிரி தன் படங்களின் மையக் கதையை சமூகப் பிரச்சனைகளை அடையாளப்படுத்தும் வகையில் உருவாக்கும் முயற்சியை தொடரச்சியாக நாம் அவர் படங்களில் பார்க்க முடிகிறது.</p>
<p dir="ltr">இந்தப் படங்களுக்கு பெரியளவிலான வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும் கார்த்திக் சுப்பராஜ் சமீபத்தில் இயக்கிய ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் வெற்றியில் இந்தப் படங்களின் பங்கு அதிகம் இருக்கிறது. முதல் பாதி முழுக்க முழுக்க கார்த்திக் சுப்பராஜின் முந்தையப் படங்களில் ஸ்டைலைக் கொண்டிருக்க இரண்டாவது பாதி எந்த வித ஸ்டைலோ பாவனையோ இல்லாமல் பார்வையாளர்களுடன் நேரடியாக உரையாடும் வகையில் அமைந்திருந்தது. ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் வெற்றி என்பது வெறும் ஒரு படத்தின் வெற்றி மட்டுமில்லை… கார்த்திக் சுப்பராஜ் ஒரு இயக்குநராக அடுத்தக் கட்டத்தில் அடி எடுத்து வைத்திருப்பதும்தான்.</p>

Source link


Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports