<p>கர்நாடகா மாநிலம் கல்புர்கி மாவட்டம் யாத்ரமி தாலுகா மாகனகெரே கிராமத்தை சேர்ந்தவர் கொல்லப்பா (வயது 24). இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். கொல்லப்பா &nbsp;தனது உறவினரான சசிகலாவை (வயது 20) விரும்பியுள்ளார். இருவரும் காதல் வசப்பட்ட நிலையில், இவர்கள் உறவு முறையில், அண்ணன் தங்கை என கூறி உறவினர்கள் காதலை கைவிடும்படி கூறியுள்ளனர். ஆனால் இருவரும் காதலை கைவிடவில்லை.</p>
<p>இதற்கிடையே சசிகலாவின் மனதை மாற்றிய பெற்றோர், அவருக்கும் விஜயாப்புரா மாவட்டம் சிந்தகி கிராமத்தை சேர்ந்த வேறு நபருடன் திருமணம் நிச்சயம் செய்தனர். பின் கல்யாணத்திற்கான ஏற்பாடுகளும் செய்தனர். இந்த விஷயம் கொல்லப்பாவிற்கு தெரிய வந்தது. இதனால் கொல்லப்பா சசிகலாவை சந்திக்க முடிவு செய்தார். அதனை தொடர்ந்து இருவரும் வீட்டை விட்டு ஓடினர்.</p>
<p>பின் அருகில் இருக்கும் கோயிலுக்குச் சென்று இருவரும் திருமணம் செய்துகொண்டனர். வீட்டை விட்டு இருவரும் வெளியேறியதை அறிந்த உறவினர்கள் அவர்களை தேடி வந்தனர். இதனால் கொல்லப்பா மற்றும் சசிகலா இருவரும் கிராமத்தில் இருக்கும் புறநகர் பகுதிக்கு சென்று மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டனர்.</p>
<p>முன்னதாக அவர்கள் தற்கொலை செய்வது மற்றும் அதற்கான காரணத்தை வீடியோவாக எடுத்து தங்கள் வாட்ஸ்-அப்பில் உள்ள நண்பர்களுக்கு அனுப்பினர். இதுபற்றி அறிந்தவுடன் பதறிப்போன உறவினர்கள் புறநகருக்கு விரைந்தனர். ஆனால் அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்றபோது இருவரும் தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அருகில் இருக்கும் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.</p>
<p>யாத்ரமி காவல் நிலைய போலீசார் இது பற்றி தகவல் அறிந்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு சென்று இருவரின் உடலையும் கைப்பற்றினர். பின்னர் இருவரின் உடலையும் பிரேத பரிசோதனைக்காக அருகில் இருக்கும் மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி வழக்கு பதிவு செய்து உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காதல் ஜோடி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p>

Source link


Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports