<p>சேலம் பெரியார் பல்கலைகழக துணைவேந்தர் ஜெகநாதன் மீதான வழக்கு விசாரணைக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், ஆவணங்களை சரிபார்த்ததில் ஜெகநாதனின் நடவடிக்கைகளில் குற்ற நோக்கம் இருப்பதாக தெரியவில்லை என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார். அதிமட்டுமின்றி வழக்கின் விசாரணை 4 வாரங்களுக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. </p>
<p>சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.ஜெகநாதன், விதிகளை மீறி, அரசு அனுமதி பெறாமல், பல்கலைகழகத்தின் பல்வேறு பணிகளை மேற்கொள்வதற்காக, சொந்தமாக பெரியார் பல்கலைகழக தொழில்நுட்ப தொழில்முனைவோர் மற்றும் ஆராய்ச்சி பவுண்டேசன் (PUTER Foundation) என்ற அமைப்பை தொடங்கி, அரசு நிதியை பயன்படுத்தியதுடன், பல்கலைக்கழக அதிகாரிகளைக் கொண்டே அந்த நிறுவனத்தை செயல்படச் செய்ததாக, பல்கலைகழகத்தின் ஊழியர் சங்கத்தினர் (PUEU) காவல்துறையில் புகார் அளித்திருந்தனர். </p>
<p>அதேபோல ஜாதிப்பெயரை குறிப்பிட்டு திட்டியதாக கிருஷ்ணவேணி, சக்திவேல் ஆகியோரும் துணைவேந்தருக்கு எதிராக புகார் அளித்திருந்தனர்.இந்த புகார்களின் அடிப்படையில், இந்திய தண்டனைச் சட்டம், வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் கருப்பூர் காவல் நிலையத்தினர், வழக்குப்பதிவு செய்து, துணைவேந்தர் ஜெகநாதனை கைது செய்த நிலையில், சேலம் மாஜிஸ்திரேட் நீதிமன்றம், அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது.</p>
<p>இந்த இடைக்கால ஜாமீனை ரத்து செய்யக் கோரி, சேலம் கூடுதல் ஆணையர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று (ஜனவரி 19) விசாரணைக்கு வந்தது. இந்த நிலையில், தனது நற்பெயரை கெடுக்கும் நோக்கத்துடன் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறி அதை ரத்து செய்யக் கோரி ஜெகநாதன் மனு தாக்கல் செய்திருந்தார். </p>
<p>அதில், துணைவேந்தராக 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் பொறுப்பேற்றபோது நிர்வாகம் மற்றும் நிதி முறைகேடுகள் இருந்தததாகவும், அவற்றை ஒழிக்க நடவடிக்கை எடுத்ததாகவும் குறிப்பிட்டுள்ள்ளார். தொலைதூரக் கல்வி பிரிவில் போலி ஆவணங்கள் தயாரிப்பில் ஈடுபட்ட ஊழியர்களை இடைநீக்கம் மற்றும் பணிநீக்கம் செய்ததால் எழுந்த கடும் எதிர்ப்பையும், உயிருக்கு அச்சுறுத்தலையும் மீறி செயல்பட்டுக்கொண்டிருப்பதாக ஜெகநாதன் தெரிவித்துள்ளார்.</p>
<p>அரசின் அனுமதி இல்லாமல் ஓர் அமைப்பை (PUTER FOUNDATION) தொடங்கியதாக கூறுவது தவறு என்றும், அரசு துறைகளிடம் உரிய அனுமதியை பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>இவற்றின் பின்னணியில் தனக்கு எதிராக அளிக்கப்பட்ட புகாரின் கீழ், தன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் இந்திய தண்டனை சட்டம் ஆகியவற்றில் பதிவான வழக்கை ரத்து செய்ய வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார். இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்த போது, துணைவேந்தர் ஜெகநாதன் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏ.நடராஜன், ஓய்வுபெற்ற பின் லாபமடையும் நோக்கில் இந்த நிறுவனம் துவங்கப்பட்டதாக யூகத்தின் அடிப்படையில் புகாரளிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு 2013 ம் ஆண்டு பிறப்பித்த அரசாணைப்படி, அனைத்து பல்கலைக்கழகங்களில் இதுபோன்ற அமைப்பு துவங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. லாப நோக்கில்லா நிறுவனம், மாணவர்களின் திறமையை ஊக்குவிக்கும் வகையில் இந்த நிறுவனத்தை துவங்கவும், தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யவும் அரசும் அனுமதியளித்துள்ளது.</p>
<p>அப்போது, இதுவரை நடத்திய விசாரணையில் என்ன தெரிய வந்தது என நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அரசுத்தரப்பு வழக்கறிஞர், “ 2023ல் ஜெகநாதன், அரசு மற்றும் சிண்டிகேட்டிடம் பெரியார் பல்கலைக்கழக பெயரில் பதிவு செய்ய எந்த ஒப்புதலும் பெறவில்லை. பல்கலைக்கழகத்தின் ஒப்புதல் பெறாமல் எந்த வர்த்தக நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது என பல்கலைக்கழக விதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தின் 2024 சதுர அடி நிலத்தை எந்த அனுமதியுமில்லாமல் பயன்படுத்தியுள்ளனர். அரசு அனுமதியின்றி ஐ.டி.டி சி என்ற பெயரை பியூட்டர் என பெயர் மாற்றம் செய்துள்ளனர். தனியார் நிறுவனங்களுடன் பல்கலைக்கழகத்துடன் எந்த ஒப்பந்தமும் செய்து கொள்ளவில்லை. பியூட்டர் நிறுவனம் நான்கு தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளனர். பெரியார் பல்கலைக்கழகத்தின் ஒரு பகுதி எனக் கூறி வருகின்றனர். பணம் பரிமாறப்பட்டதா என்பது குறித்து புலன் விசாரணையில் தெரிய வரும். 12 நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டுள்ளது” என தெரிவித்தார். </p>
<p>அப்போது, புலன் விசாரணை நடந்து வரும் நிலையில் எப்படி தலையிட முடியும். பணபரிமாற்றம் குறித்து விசாரிக்கப்பட வேண்டும் என நீதிபதி குறிப்பிட்டார். ஜெகநாதன் தரப்பில் பேசிய வழக்கறிஞர், ”2013ல் அரசாணை பிறப்பிக்கப்பட்ட போதும், இன்னும் அந்த நிறுவனம் செயல்பட துவங்கவில்லை. 2023ல் பெயர் மாற்றம், நிலம் ஒதுக்கிடு தொடர்பாகவும், தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்ய பல்கலை சிண்டிகேட்டில் அனுமதி கோரப்பட்டது. அனைத்தும் பொது வெளியில் உள்ளது. ஒரு ரூபாய் கூட பரிமாறவில்லை. உயர் கல்வித்துறை சம்பந்தப்பட்ட இந்த விவகாரத்தில் காவல் துறை தலையிட முடியாது” என்றார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி, வழக்கில் ஜெகநாதனுக்கு சம்மன் அனுப்பப்பட்டதா? எனக் கேள்வி எழுப்பினார்.</p>
<p>இதற்கு பதிலளித்த அரசுத்தரப்பு வழக்கறிஞர், ஜெகநாதன் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் வைக்க கோரிய போது, அதற்கு மறுப்பு தெரிவித்த மாஜிஸ்திரேட் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார் என தெரிவித்தார். இதையடுத்து, ஆவணங்களை ஆய்வு செய்வதாக கூறிய நீதிபதி, விசாரணையை இன்று தள்ளிவைத்தார். இந்நிலையில் இன்றைய விசாரணையில், சேலம் பெரியார் பல்கலைகழக துணைவேந்தர் ஜெகநாதன் மீதான வழக்கு விசாரணைக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், ஆவணங்களை சரிபார்த்ததில் ஜெகநாதனின் நடவடிக்கைகளில் குற்ற நோக்கம் இருப்பதாக தெரியவில்லை என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார். அதிமட்டுமின்றி வழக்கின் விசாரணை 4 வாரங்களுக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. மேலும், வழக்கு விசாரணைக்கு அரசு தலைமை வழக்கறிஞர் ஆஜராகி வாதிட இருப்பதாக கூறி வழக்கின் விசாரணை தள்ளிவைக்க அரசு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் அதனை நீத்பதி ஏற்க மறுத்துவிட்டார். தடையை நீக்க வேண்டும் என்றால் தடை நீக்க கோரி தனி மனு தாக்கல் செய்ய காவல்துறைக்கு நீதிபதிகள் அறிவுரை வழங்கினர். இதனிடையில், தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி பெரியார் பல்கலைகழக துணைவேந்தர் ஜெகநாதன் தொடர்ந்த வழக்கின் விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் நாளை தள்ளிவைத்துள்ளது.</p>