<p>எழுத்தாளர்கள் தனக்கு கொடுத்த கதைகள் திருப்தியளிக்கவில்லை என்று இயக்குநர் கெளதம் மேனன் கூறிய கருத்திற்கு மறுப்புத் தெரிவித்துள்ளார் எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்.</p>
<h2><strong>கெளதம் மேனன்</strong></h2>
<p>இயக்குநர் கெளதம் மேனன் சமீபத்தில் சித்ரா லட்சுமணன் நடத்தும் சாய் வித் சித்ரா நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் தனது சினிமா பயணத்தின் பல்வேறு அனுபவங்களை அவர் விவரமாக பகிர்ந்துகொண்டார். மேலும் இந்த நிகழ்ச்சியில் ஏன் எழுத்தாளர்களின் புத்தகங்களை படமாக்குவதில்லை என்கிற கேள்விக்கு அவர் பதிலளித்தார். தான் ஆரம்பக்கட்டத்தில் நிறைய எழுத்தாளர்களை அனுகியதாகவும் ஆனான் அவர்கள் கொடுத்த கதைகள் தன்னை கவர்வில்லை என்பதால் தன் படங்களுக்கு தானே எழுதத் தொடங்கியதாக அவர் கூயிருந்தார்.</p>
<p>கெளதம் மேனன் அணுகியதாக கூறிய எழுத்தாளர்களின் பெயர்களில் பட்டுக்கோட்டை பிரபாகரன் அவர்களின் பெயர்களையும் குறிப்பிட்டிருந்தார். தற்போது கெளதம் மேனன் தெரிவித்த கருத்திற்கு மறுப்புத் தெரிவிக்கும் வகையில் பட்டுக்கோட்டை பிரபாகரன் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.</p>
<h2><strong>நான் கேட்ட தொகையை நீங்கள் தரவில்லை</strong></h2>
<p>இந்த பதிவில் பட்டுக்கோட்டை பிரபாகரன் இப்படி கூறியுள்ளார் “ மதிப்பிற்குரிய இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் அவர்களுக்கு..வணக்கம். தங்கள் திரைப்படங்களின் திரை மொழியில் உள்ள தனித்துவத்தையும், காதலைக் காதலித்து காதலுடன் காட்சிப்படுத்தும் நேர்த்தியையும் ரசிப்பவன் நான். சமீபத்தில் சாய் வித் சித்ரா என்கிற பேட்டி நிகழ்வில் நீங்கள் ஏன் பிரபல நாவலாசிரியர்களின் கதைகளைப் படமாக்குவதில்லை என்கிற சித்ரா லட்சுமணன் கேள்விக்குப் பதில் அளிக்கையில்.. நான் பல பிரபல கதாசிரியர்களை அணுகியுள்ளேன். அவர்கள் தந்த முதல் வடிவம் என்னைத் திருப்திப் படுத்தாததால்…நானே எழுதத் துவங்கினேன் என்று பதில் சொல்லியிருக்கிறீர்கள். அந்தக் கதாசிரியர்களின் பட்டியலில் என் பெயரையும் குறிப்பிட்டிருக்கிறீர்கள்.</p>
<p>இது தொடர்பாக ஒரு விளக்கம் தரவேண்டிய நிலை. காக்க காக்க திரைப்படத்தின்போதுதான் நீங்கள் என்னைச் சந்தித்தீர்கள். பிறகு உங்கள் அலுவலகத்திற்கு நான் வந்தேன். காக்க காக்க கதையின் சுருக்கத்தை விவரித்தீர்கள். அதன் பிறகு அந்தப் படத்தில் பணியாற்ற தொகை பேசினீர்கள். அப்போது நான் வாங்கிக்கொண்டிருந்ததை விடவும் மிகவும் குறைவாகக் குறிப்பிட்டீர்கள். என் சங்கடத்தைத் தெரிவித்தேன். அது முதல் காப்பி அடிப்படையில் நீங்களே தயாரிப்பாளராக செயல்படுவதால் நீங்கள் குறிப்பிட்ட தொகைதான் முடியும் என்று உறுதியாகச் சொன்னீர்கள்.</p>
<p>ஒரு படத்தில் திரைக்கதையும், வசனமும் எத்தனை முக்கியம் என்று நன்கு உணர்ந்த நீங்கள் அன்று கதாசிரியருக்கு உரிய நியாயமான தொகையை நிர்ணயிக்கத் தயாராய் இல்லை. அந்தப் படத்திற்காக நான் ஒரு வரிகூட எழுதவில்லை. உண்மை இப்படியிருக்க.. பொத்தாம் பொதுவாக கதாசிரியர்கள் கொடுத்த முதல் வடிவம் திருப்தியாய் இல்லை என்கிற பதிலில் என் பெயரும் சொல்லப்பட்டதால்.. விளக்கம் தர வேண்டியதாகிறது. இந்த உண்மையை கவிஞர் தாமரையும் அறிவார். ஒரு வேளை 21 வருடங்கள் முன்பு நிகழ்ந்த சம்பவம் என்பதால் யாருக்கும் மறதி என்பது இயல்பானது என்று எடுத்துக்கொள்கிறேன். உங்கள் கதைக்கு மெருகேற்றும் பணிக்கு அழைக்காமல் திரைக்கேற்ற கதைகள் உங்களிடம் இருக்கிறதா என்று என்னை அணுகியிருந்தால்.. ஒரு வேளை நாமிருவரும் இணைந்து சில சுவாரசியமான படைப்புகளைத் தந்திருக்க முடியும் என்று இப்போது யோசிக்கிறேன். நன்றி.”</p>
<p>இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.</p>

Previous Post
Next Post
Latest News
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports



























waste of time