பல வருடங்களாகக் குழந்தையில்லாமல் தவிக்கிறது ஒரு தம்பதி (போஸ் வெங்கட் – வினோதினி). கடவுளை நம்பாத போஸ் வெங்கட், கைகூப்பி கடவுளை வணங்கி வேண்டுகிறார். கடவுளின் அருளால் ஆண் குழந்தை பிறக்கிறது. ஆனால், பிறந்த சில நிமிடங்களில் குழந்தை இறந்துபோகவே, மீண்டும் கடவுளிடம் முறையிடுகிறார். அப்போது கடவுள் தோன்றி அருள்தரக் குழந்தை உயிர்பெறுகிறது. ஆனால், பெண் குழந்தையாக உயிர்பெறுகிறது. எனவே காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை பெண்ணாகவும், மாலை 6 மணி முதல் காலை 6 மணிவரை ஆணாகவும் வளர்கிறது குழந்தை.
ரஜினி எனப் பெயரிடப்பட்டு, ஓர் இதயம் இரு உயிர்கள் என்பதாகவே வளர்கிறார்கள். வளரும் குழந்தைக்குள் இருக்கும் இருவர், வளர வளர தங்களுக்குள் ஒருவித வெறுப்புடன் இருக்கின்றனர். இளம் வயதான நிலையில் தாய், தந்தை இருவரும் விபத்தில் இறக்கின்றனர். அதன் பிறகு `ரஜினி” சென்னை கிளம்பி வர, பகலில் பெண்ணாகவும், இரவில் ஆணாகவும் எப்படி வளர்க்கிறார், காதல், தொழில், ஏக்கம் என அவர் எதிர்கொள்ளும் சிக்கல்கள் என்னென்ன என்பதே அஸ்வின் கந்தசாமி இயக்கியிருக்கும் ‘டபுள் ஆக்குபன்ஸி’ படத்தின் கதை!






















