கர்நாடக மாநிலம் கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோவிலில் முதலமைச்சர் விஜய் சாமி தரிசனம் செய்தார்.
தனது 3 நாள் டெல்லி பயணத்தை நிறைவு செய்த முதல்-அமைச்சர் விஜய், கர்நாடக மாநிலத்தின் புகழ்பெற்ற கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்து வழிபட்டார். அவரது வருகையையொட்டி கோவில் வளாகத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
டெல்லி பயணத்தை முடித்துவிட்டு மங்களூரு சென்ற முதல்-அமைச்சர் விஜய், அங்கிருந்து சாலை மார்க்கமாக கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோவிலுக்கு சென்றார். கோவில் வளாகத்தை வந்தடைந்த அவரை கோவில் அர்ச்சகர்கள் வரவேற்று, பாரம்பரிய முறையில் பூரண கும்ப மரியாதை அளித்தனர்.
பின்னர் கோவிலுக்குள் சென்று மூகாம்பிகை அம்மனை தரிசனம் செய்த முதல்-அமைச்சர் விஜய், கோவில் பிரகாரத்தை சுற்றி வலம் வந்து சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்டார். கோவில் மரபின்படி மேல்சட்டை அணியாமல் அவர் தரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கது. அவருடன் சென்ற பாதுகாப்பு அதிகாரியும் அதே நடைமுறையை பின்பற்றினார்.
வழிபாட்டின் போது, கோவிலுக்கு 1 கிலோ 600 கிராம் எடையும், சுமார் 2.5 அடி நீளமும் கொண்ட வெள்ளி வாளை காணிக்கையாக முதல்-அமைச்சர் விஜய் வழங்கினார். இதனை கோவில் நிர்வாகம் பெற்றுக்கொண்டு நன்றியை தெரிவித்தது.
முதல்-அமைச்சர் விஜய்யின் வருகையால் கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்தது. இதையடுத்து, பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டு, கோவில் வளாகத்தில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு மற்றும் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன.
தமிழக அரசியலில் முக்கிய இடம்பிடித்த முன்னாள் முதல்-அமைச்சர்களான எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரும் தங்களது பதவிக் காலங்களில் கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.






















