மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு தற்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மூன்று மாதங்களுக்கு முன்பாக ஒரு கூட்டணியில் நின்று வெற்றிபெற்ற வேட்பாளர்கள், பதவியை ராஜினாமா செய்துவிட்டு, த.வெ.க-வின் குதிரை பேரத்தால் கட்சித் தாவி, மீண்டும் அதே நபர்கள் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர். இந்தத் தேர்தல் தேவையற்றது. இதனால் கட்சிகளுக்கும், அரசுக்கும் வீண் செலவு. இத்தேர்தல் ஏன் வந்தது என்பது குறித்து மதுராந்தகம், தாராபுரம் பகுதி வாக்காளர்கள் கேள்வி கேட்க வேண்டும். இந்த இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் அ.தி.மு.க வேட்பாளர்களின் வெற்றிக்கு பா.ஜ.க முழுமையாகப் பணியாற்றும்.

ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது, குயின் மேரிஸ் கல்லூரி நிலத்தில் கர்நாடக விதான் சபா கட்டடத்தை மிஞ்சும் வகையில் புதிய தலைமைச் செயலகம் கட்ட வரைபடம் தயாரித்து அனுமதி கோரியபோது, அன்றைய மத்திய அரசு அதற்குத் தடையாக இருந்தது. ஆனால் தற்போது பட்டினப்பாக்கத்தில் ரூ.1200 கோடி மதிப்பீட்டில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்போவதாக அறிவித்துள்ளனர். புதிய நாடாளுமன்றக் கட்டடமே ரூ.900 கோடியில் கட்டப்பட்டுள்ள நிலையில், இதைவிட அதிக மதிப்பீடு போட்டிருப்பது மிகப்பெரிய ஊழலுக்கு வழிவகுக்கும்.
























