நவீன உலகிற்கு மத்தியில், தனது பழம்பெரும் கலாசாரத்தையும் வீரத்தையும் பறைசாற்றுகிறது “உலக நாடோடி விளையாட்டு போட்டிகள்’ (World Nomad Games). 2026-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 6 வரை கிர்கிஸ்தான் நாட்டில் 6-வது பதிப்பாக இப்போட்டிகள் பிரமாண்டமாக நடைபெறுகின்றன.
வரலாறும் பிரமாண்ட தொடக்க விழாவும்:
மத்திய ஆசிய நாடோடி சமூகங்களின் பாரம்பர்யம் மற்றும் வீரத்தைப் பாதுகாக்கும் நோக்கில் 2014-ல் கிர்கிஸ்தானில் இப்போட்டி தொடங்கியது. 19 நாடுகளுடன் மிகச்சிறிய அளவில் தொடங்கிய இத்திருவிழா, இன்று 100-க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்கும் மாபெரும் உலக நிகழ்வாக மாறியுள்ளது.
தலைநகர் பிஷ்கேக்கில் நடைபெற்ற இப்போட்டியின் தொடக்க விழா உலக அரசியல் அரங்கின் முக்கிய மையமாக மாறியது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சிமாநாட்டுடன் இணைந்து நடந்த இந்நிகழ்வில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், துருக்கி அதிபர் எர்டோகன் மற்றும் ஈரானிய அதிபர் மசூத் பெசெஷ்கியான் உள்ளிட்ட பல சர்வதேச தலைவர்கள் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.
























