அமெரிக்காவில் வேலை அடிப்படையில் (Employment-based) கிரீன் கார்டு (Green Card) பெறக் காத்திருக்கும் இந்தியர்களுக்கு நீண்ட காலக் காத்திருப்பு ஏற்பட்டுள்ளதாகப் புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. தற்போதைய நிலை தொடர்ந்து நீடித்தால், EB-2 பிரிவில் (Advanced degree அல்லது exceptional ability கொண்ட professionals) புதிதாக விண்ணப்பிக்கும் இந்தியர்களுக்குக் கிரீன் கார்டு கிடைக்க 179 ஆண்டுகள் வரை ஆகலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் ஆண்டுதோறும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வேலை அடிப்படையிலான கிரீன் கார்டுகள் மட்டுமே வழங்கப்படுகின்றன. மேலும், ஒரு நாட்டைச் சேர்ந்தவர்களுக்குப் பொதுவாக 7 சதவீத வரம்பு (Country Cap) உள்ளது. அமெரிக்காவில் கிரீன் கார்டு பெற விண்ணப்பிக்கும் இந்தியத் தொழில்முறை பணியாளர்களின் (Professionals) எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், விண்ணப்பங்கள் சேர்ந்து backlog தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
தற்போதைய கணிப்பின்படி, இந்தியர்களுக்கு EB-1 பிரிவில் சுமார் 5 ஆண்டுகள், EB-2 பிரிவில் 179 ஆண்டுகள், EB-3 பிரிவில் 38 ஆண்டுகள் வரை காத்திருப்பு இருக்கலாம். EB-1 (மிக உயர்ந்த திறமை அல்லது சாதனை கொண்டவர்கள்), EB-2 (Advanced degree அல்லது exceptional ability கொண்ட professionals) மற்றும் EB-3 (Bachelor”s degree professionals மற்றும் skilled workers போன்றவர்கள்) பிரிவுகளைச் சேர்த்து, இந்தியத் தொழில்முறை பணியாளர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்த குடும்ப உறுப்பினர்கள் என கிட்டத்தட்ட 10 லட்சம் பேர் நிலுவைப் பட்டியலில் (Backlog) இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், 179 ஆண்டுகள் என்பது உறுதியான காத்திருப்பு காலம் அல்ல. தற்போதைய குடியேற்ற விதிமுறைகள் (Immigration Rules), விசா வரம்புகள் (Visa Limits) மற்றும் நிலுவைப் பட்டியல் தொடர்ந்து நீடிக்கும் என்ற அடிப்படையில் செய்யப்பட்ட ஒரு கணிப்பு மட்டுமே. எதிர்காலத்தில் விதிமுறைகள் அல்லது விசா எண்ணிக்கையில் மாற்றம் ஏற்பட்டால், இந்த காத்திருப்பு காலமும் மாறக்கூடும்.
























