புதுச்சேரி சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. அதையொட்டி கவர்னர் உரை மீதான விவாதத்தில் பேசிய முதல்வர் ரங்கசாமி, “புதுவைக்கு மாநில அந்தஸ்து வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
சட்டசபையில் பலமுறை தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். கடந்த காலத்தில் மாநில அந்தஸ்து பெறுவதில் மாற்று கருத்துகள் இருந்தது.
ஆனால் அந்த நிலை தற்போது இல்லை. நிர்வாக ரீதியில் பல தடைகள் இருப்பதை எம்.எல்.ஏக்களும், அரசு ஊழியர்களும், மக்களும் அறிந்துள்ளனர்.
மாநில அந்தஸ்து கேட்டு பல பிரதமர்களைச் சந்தித்து பேசியிருக்கிறேன். அப்போதெல்லாம் அவர்கள் பார்ப்போம் எனக் கூறுவார்கள். அதனால் மாநில அந்தஸ்து கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அதற்காக மேலும் அழுத்தம் தர வேண்டும்.

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கேட்டு நாடாளுமன்றம் முன்பு நேரு எம்.எல்.ஏ போராட்டம் நடத்தினார். அதை நான் பாராட்டுகிறேன். அதேபோல தி.மு.க எம்.பி சிவா பாராளுமன்றத்தில் குரல் கொடுத்தார். அதற்காக புதுவை எம்.பி-க்களும் குரல் கொடுக்க வேண்டும். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் தொடர்ந்து மாநில அந்தஸ்தை வலியுறுத்துவோம்.
பிரதமர் மோடி பங்கேற்ற கூட்டத்தில், `மாநிலத்துக்கு மத்திய அரசு நிதி, திட்டங்களை வழங்குகிறது. இருப்பினும் ஒரு குறை உள்ளது. புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும்’ என்று கோரிக்கை வைத்தேன்.
முதலமைச்சர், அமைச்சர்களுக்குப் பல சங்கடங்கள் இருக்கின்றன. அனைத்துக்கும் கவர்னரிடம் செல்ல வேண்டியுள்ளது. அதற்கு ஒரே தீர்வு மாநில அந்தஸ்து பெறுவதுதான். கவர்னர் உரையில் வழக்கமாக அரசு என்ன திட்டங்கள் செய்துள்ளது, எதிர்காலத்தில் என்ன திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்பதைக் கோடிட்டு காட்டுவது மட்டுமே இருக்கும்.
























