அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதலில், பிப்ரவரி 28-ம் தேதி, ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி காமேனி உயிரிழந்தார்.
இதன் பிறகு, அவருடைய மகன் மொஜ்தபா காமேனி ஈரானின் அடுத்த உச்சத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பொதுவெளியில் காணப்படவில்லை
மொஜ்தபா காமேனி உச்சத் தலைவரான பின், ஒருமுறைக்கூட பொதுவெளியில் காணப்படவில்லை.
அவருடைய தந்தை இறந்த தாக்குதலில், இவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. அதற்காகச் சிகிச்சை பெற்று வருகிறார் என்று அவர் பொதுவெளியில் காணப்படாததற்கு முதலில் காரணம் கூறப்பட்டது.
சந்தேகம்
பின்னர் அவருடைய பாதுகாப்பிற்காக பொதுவெளியில் அவர் வரவில்லை என்று சொல்லப்பட்டது.
அவருடைய தந்தை மற்றும் பிற குடும்ப உறுப்பினர்களின் இறுதி ஊர்வலத்தில் கூட, மொஜ்தபா காமேனி கலந்துகொள்ளவில்லை.
ஏற்கெனவே ‘மொஜ்தபா காமேனி உண்மையில் உயிருடன்தான் இருக்கிறாரா’ என்று இருந்துவந்த கேள்வி இன்னும் வலுத்தது.
இந்தச் சந்தேகத்திற்குப் பதிலளிப்பதுபோல, ஈரான் அவருடைய வீடியோ கிளிப் ஒன்றைப் பகிர்ந்திருந்தது.
ட்ரம்ப் பதில்
நேற்றைய (ஆகஸ்ட் 26) நேர்காணல் ஒன்றில், அமெரிக்க அதிபர் ட்ரம்பிடன் மொஜ்தபா காமேனி உயிருடன் இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்களா என்கிற கேள்வி கேட்கப்பட்டது.
இதற்கு ட்ரம்ப், “மொஜ்தபா காமேனி இறந்துவிட்டாரென நான் நினைக்கவில்லை.
அவரது உடலின் இடது பக்கம், கை, கால் என அனைத்துப் பகுதிகளிலும் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது உண்மைதான்.
ஆனாலும், அவர் இறந்துவிட்டார் என்று தோன்றவில்லை.
ஒருவேளை அவர் உண்மையிலேயே இறந்துவிட்டாரென்றால், ஈரான் மிகச்சிறப்பாக நாடகமாடுகிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்” என்று பதிலளித்திருக்கிறார்.
























