தவெக தலைவர் விஜய் வருமானத்தை மறைத்ததாக வருமானவரித்துறை விதித்த ஒன்றரை கோடி ரூபாய் அபராதம் செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது…
நடிகர் விஜய்யின் வீடு மற்றும் அலுவலகங்களில் கடந்த 2015ஆம் ஆண்டு வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது பல்வேறு ஆவணங்களை கைப்பற்றினர். அதே நேரத்தில், 2015 – 2016ஆம் நிதி ஆண்டுக்கான வருமான வரியை விஜய் தாக்கல் செய்திருந்தார்.
அந்த கணக்கில் 35 கோடியே 42 லட்சத்து 91 ஆயிரத்து 890 ரூபாய் வருமானம் காட்டியுள்ளார். ஆனால், அவர் காட்டியுள்ள கணக்கில், புலி திரைப்படத்தில் நடிப்பதற்காக வாங்கிய 15 கோடி ரூபாய் வருமானத்தை காட்டவில்லை என வருமான வரித்துறையினர் கண்டுபிடித்தனர்.
ஏற்கனவே சோதனை செய்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், புலி திரைப்படத்தின் மூலம் கிடைந்த 15 கோடி ரூபாய் ஊதியத்தை விஜய் கணக்கில் காட்டவில்லை என உறுதி செய்த வருமான வரித்துறையினர், 2022ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதி ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டது.
ஆனால், தான் எந்த தவறும் செய்யவில்லை, கணக்கில் முறைகேடு இல்லை என உறுதிப்பட தெரிவித்த விஜய், அபராதத்தை கட்டாமல், அதற்கு எதிராக சென்னை உயர்நிதீமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தொடர்ந்து தீவிரமாக விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி தீர்ப்பை வழங்கினார்.
அதில், வருமானத்தை மறைத்ததாக வருமானவரித்துறையினர் விதித்த அபராதம் செல்லும் என தீர்ப்பு வழங்கினார். இதன்மூலம், நடிகர் விஜய் ஒன்றரை கோடி ரூபாய் அபராதத்தை செலுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
அதே நேரத்தில், இந்த தீர்ப்பை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் சீராய்வு மனுவையோ, அல்லது உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீ்ட்டு மனுவையோ விஜய் தரப்பில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஊழலுக்கு எதிராக விஜய் பேசி வரும் நிலையில், இந்த நேரத்தில் இப்படி ஒரு தீர்ப்பு அவருக்கு பின்னடைவையே ஏற்படுத்தும் என தவெகவினர் வேதனையுடன் தெரிவித்து வருகின்றனர்.
தவெக, tvk, vijay, thalapathy, thalapathy vijay, income tax, highcourt, விஜய், தளபதி, தமிழக வெற்றிக் கழகம், வருமான வரித்துறை,

