தண்ணீர் தரமாட்டோம் என்ற கர்நாடகா… இப்போ அறிவிப்பின்றி தண்ணீர் திறக்கிறது…

தமிழகத்திற்கு தண்ணீர் தரமுடியாது என்று கர்நாடக அரசு தெரிவித்திருந்த நிலையில், தற்போது கனமழை காரணமாக, கபினி, கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து 62,000 கன‍அடி தண்ணீர் காவிரியில் திறந்துவிட்டுள்ளது.

காவிரி நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், கபினி அணை முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளது. அந்த அணையின் மொத்த கொள்ளளவான 19.52 டிஎம்சியில் தற்பொழுது 17.05 டிஎம்சியாக நீர் நிரம்பியுள்ளது.

அணைக்கு நீர்வரத்து 49,334 கன அடியாகவும், நீர் வெளியேற்றம் 61,200 கன அடியாகவும் உள்ளது. இதேபோல் மண்டியா மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணையின் மொத்த கொள்ளளவான 124.80 அடியில், தற்போதைய நீர்மட்டம் 116.6 அடியாக உயர்ந்துள்ளது.

தற்போது, அணைக்கு நீர்வரத்து 44,617 கன அடியாக அதிகரித்துள்ளதால், அணையிலிருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் நீர் அளவு 700 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று, கபினி அணையை ஒட்டியுள்ள நுகு அணையில் இருந்து, 5,000 கன அடி தண்ணீர் தமிழகத்திற்கு வரும் காவிரி கால்வாயில் திறந்துவிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் காவிரி கால்வாயில், சுமார் 67,000 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. அடுத்த ஒருசில நாட்களில் கே.ஆர்.எஸ் அணையும் நிரம்பும் என்பதால், அந்த அணையில் இருந்தும் அதிக அளவு தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திற்கு தண்ணீர் தரமுடியாது என்று கர்நாடக அரசு கூறிய நிலையில், தற்போது எந்த அறிவிப்பும் இல்லாமல் கர்நாடகா தண்ணீர் திறந்துவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.