ஆனால், சினிமாவில் தட்கல் முறை என்பது வரிசையில் காத்திருக்கும் சிறிய படங்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டுத்தான் பெரிய படங்களுக்கு வழிவகை செய்கிறது.
இதன் காரணமாகப் பண பலமும், ஸ்டார் அந்தஸ்தும் உள்ளவர்களுக்கே முன்னுரிமை கிடைத்து வந்தது. சிறிய பட்ஜெட் படங்கள் தொடர்ந்து காத்திருக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டது.
இதுமட்டுமல்லாமல், ஒரு திரைப்படம், தேசிய விருதுகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றால், டிசம்பர் 31-ம் தேதிக்குள் சென்சார் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது.
அந்த அவசர நேரத்தில், பணம் இருக்கும் தயாரிப்பாளர்கள் தட்கல் முறையில் உள்ளே நுழையும்போது, விருதுகளுக்குத் தகுதியான படங்கள் தணிக்கை செய்யப்பட முடியாமல் போகும் சூழலும் உருவானது.
அதே சமயம், ‘இந்த அவார்டு படம் எங்கே ஓடப்போகிறது?’ என்று கேவலமாகப் பார்க்கும் ஒரு குரூப்பும் இங்கு இருக்கிறது. திரைப்படங்களின் ரிலீஸ் தேதி நெருங்கும் வரை அதில் வேலை பார்த்துக் கொண்டிருக்காமல், முன்கூட்டியே திட்டமிட்டு வேலைகளை முடிக்க வேண்டும் என்ற நிலையை நோக்கிச் சினிமா நகர்வது நல்லதுதான்.
தட்கல் முறை என்பது படைப்பாளிகளிடையே பாகுபாட்டை உருவாக்கி வந்தது. தற்போது இந்தத் தட்கல் முறை நீக்கப்பட்டிருப்பது சிறிய பட தயாரிப்பாளர்களுக்கும், இயக்குநர்களுக்கும் மிகச் சாதகமான, வரவேற்கத்தக்க ஒரு மாற்றமாகும். இதன் மூலம் சென்சார் போர்டு முன்னிலையில் அனைவரும் சமம் என்கிற ஆரோக்கியமான சூழல் மீண்டும் உருவாகும்,” எனக் கூறியிருக்கிறார்.

























