மல்வுட் நடிகரான சலீம் குமார், கடந்த 6ம் தேதி மாரடைப்பினால் காலமானார். அவருக்கு வயது 57. மிமிக்ரி கலைஞராக தனது வாழ்க்கையை ஆரம்பித்தவர் குணச்சித்திரம், காமெடி என பன்முகக்கலைஞனாக புகழ்பெற்றார். “ஆதாமிண்டே மகன் அபு’விற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது இவருக்கு வழங்கப்பட்டது. தமிழில் ‘மரியான்’, ‘நெடுஞ்சாலை’ ஆகிய படங்களில் நடித்திருக்கிறார் சலீம் குமார். உடல்நலக்குறைவினால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் மாரடைப்பினால் காலமானார். நேற்று ஞாயிற்றுகிழமை சலீம் குமாரின் உடலை கேரள அரசு மரியாதையுடன் தகனம் செய்திருந்தனர். 1990 களில் மலையாளப்பட உலகில் நடிக்கத் தொடங்கியிவர், 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.
‘நெடுஞ்சாலை’ படத்தில் சலீம் குமாரின் நினைவுகள் குறித்து இயக்குநர் ஓபிலி என்.கிருஷ்ணாவிடம் கேட்டோம். நெகிழ்ச்சியுடன் பேச ஆரம்பிக்கிறார்.

“ `நெடுஞ்சாலை’ கதையில் மாட்டு சேகர் கேரக்டரை எழுதினதும், என் மனதில் வந்து நின்றவர் சலீம்குமார் தான். ஏன்னா, அவர் நடிச்ச மலையாளப் படங்கள் நிறைய பாத்துருக்கேன். ‘நெடுஞ்சாலை’க்காக அவரிடம் நடிக்கக் கேட்கலாம் என்று முடிவு செய்ததும் போனில் அவரை தொடர்பு கொண்டேன். அந்த சமயத்தில் அவர் டெல்லியில் தேசிய விருது பெறுவதற்காக சென்றிருந்தார் போல. எனக்கு அது தெரியாது. அவருக்கு போன் செய்ததும், ‘படத்தின் ஒன்லைனை போனில் சொல்றீங்களா?’ என கேட்டார்.
நான் உடனே கதையின் லைனை சொன்ன விநாடியே ‘கேரக்டர் ரொம்ப பிடிச்சிருக்குது. பண்றேன்.’னு சொல்லிட்டார். நான் அவர்கிட்ட நீங்க பெரிய சம்பளம் வாங்குவீங்கனு கேள்விப்பட்டிருக்கேன். எங்களால அவ்வளவு கொடுக்க முடியுமானு தெரியல.. என்றதும், ‘பணம் ஒரு பிரச்னை இல்லை. பாத்துக்கலாம்..’னு சொல்லி வந்தார். அதாவது முதல்நாள் டெல்லியில் இருந்தவர், மறுநாளே நேராக கதை கேட்பதற்காக வந்துவிட்டார்.

முதல்நாள் படப்பிடிப்பு நல்லா ஞாபகம் இருக்குது. அவருக்கு சுத்தமா தமிழ் தெரியாது. மலையாளம் மட்டும்தான் பேசுவார். அன்னிக்கு நிறைய பேர்களோட அவருக்கு காம்பினேஷ் சீன். அவருக்கு மட்டும் தான் தமிழ் தெரியாது. அவர் என் டீம் கிட்ட, ‘எனக்கு மட்டும்தான் மொழி தெரியாது. சரியா நடிக்கலைனா என்னால ஒன்மோர் போயிடக்கூடாது. அதனால சீனை சரியா செய்திடணும்’னு சின்னதொரு பதட்டத்துல இருந்தவர், அதன்பின் பக்காவாக ரிகர்சல் எடுத்துவிட்டு ஷாட்டுக்கு வந்தார். அந்த ஷாட்டில் அன்னிக்கு அவர் மட்டும் தான் சரியாக செய்திருந்தார். மத்தவங்க சொதப்பினாங்க. ‘தமிழ்ல என்னால பண்ணமுடியும்’னு பெரிய நம்பிக்கை வந்திடுச்சு. ‘இனிமேல் கலக்கிடுறேன் சார்’.

அதைப் போல ஒரு சீனில் ஆரி அவரை எட்டி உதைக்கணும். அப்படி உதைக்கும் போது அவர் ஒரு மூட்டை மேல விழணும். ரிகர்சல் எல்லாம் சரியாக இருந்ததால், டேக் போயிட்டோம். அப்போ தான் அந்த சம்பவம் நடந்தது. ஆரி உதைக்கும் போது அவர் ஸ்லிப் ஆனதுல சலீம் சார் மூக்கு மேல பட்டுடுச்சு. மொத்த யூனிட்டும் பதறிட்டோம். ஏன்னா, தவறுதலாக அவர் தெரியாமல் விழுந்திருந்தாலும் அவர் மூக்கில் இருந்து ரத்தம் வழியுது. சேலம் பக்கத்துல ஒரு இண்டீரியர் இடத்துல தான் படப்பிடிப்பு நடந்தது. பக்கத்துல மருத்துவமனை இல்லாததால, டாக்டர் கிட்ட போயிட்டு வரலாம்னு அவர் கூப்பிடுறோம். ஆனால், அவர் ‘ஒண்ணுமில்லை. ஐஸ் கட்டி மட்டும் கொண்டாங்க’னு கேட்டு வாங்கி, காயத்தை சரிசெய்துக்கிட்டார். அடுத்த பத்து நிமிஷத்துல ஷாட்டுக்கு ரெடியாகி வந்து நின்னார். அப்படி ஒரு அர்ப்பணிப்பு கொண்டவர்.























