<p style="text-align: justify;">விழுப்புரம் அருகே கல்பட்டு கிராமத்தில் ஏரிக்கரைப் பகுதியில் திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வுநடுவத்தைச் சேர்ந்த சி.பழனிச்சாமி, திருவாமாத்தூர் சரவணகுமார் ஆகியோர் இரண்டு கல்வெட்டுகளை கண்டறிந்தனர். இந்த கல்வெட்டுகளைப் முனைவர் ப. வெங்கடசன் படித்தளித்தார். </p>
<p style="text-align: justify;">ஏரிக்கரையின் உள்ள பாறையில் உள்ள கல்வெட்டு பதிமூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த காடவராயன் கோப்பருஞ்சிங்கன் 3வது ஆட்சியாண்டில் வெட்டப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு 11 வரிகளில் அமைந்துள்ளது, இக்கல்வெட்டில் நெல்வாய்ப்பாக்கம் என்ற ஊரில் உள்ள ஏரிப்பகுதியில் திரிபுவனத்து ராசாக்கள் தம்பிரான் காலகண்டார்களும், குன்றமுடையானும், மலைகுலராயன் கோவலராயனும் இணைந்து அவனி ஆளப்பிறந்தான் என்ற பெயரில் ஏரியினை வெட்டுவித்து ஏரியின் தென்புறத்தில் மதகும் கலிங்கும் ஏற்படுத்தியுள்ளனர். இக்கல்வெட்டில் அரசர் பெயர் இல்லையென்றாலும் எழுத்தமைதி மற்றும் கல்வெட்டு சொல்லும் செய்தி கொண்டும் இது காடவமன்னர் கோப்பெருஞ்சிங்கன் காலத்தியது என்று கூறலாம்.</p>
<p style="text-align: justify;"><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/28/04fc7703084bfa95a95ec622517330431709108425111113_original.jpg" width="720" height="540" /></p>
<p style="text-align: justify;"><strong>கோப்பெருஞ்சிங்கனின் கல்வெட்டுகள்</strong></p>
<p style="text-align: justify;">மேலும், விழுப்புரம் பகுதியில் பல்வேறு இடங்களில் கோப்பெருஞ்சிங்கனின் கல்வெட்டுகள் கோட்டைகள் கிடைத்து வருகின்றன. அதன் அடிப்படையில் கல்பட்டு கிராமத்தில் கோப்பெருஞ்சிங்கன் காலத்தில் இந்த ஏரியை வெட்டுவித்ததை அறியலாம். அதே ஏரியின் மற்றொரு பகுதியில் 20 அடி நீளமுள்ள அளவுகோளுடன் கூடிய 3 வரி கொண்ட ஒரு கல்வெட்டு உள்ளது. இந்த கல்வெட்டில், இந்த கல் அடி அளவு கோல்தமம் அடி அளவு 6 உள்பட 20 அடி கோல் என்று வெட்டப்பட்டுள்ளது.</p>
<p style="text-align: justify;"><strong>தமிழ்நாட்டில் அளவுகோலுடன் கூடிய கல்வெட்டு</strong></p>
<p style="text-align: justify;">இந்த அளவுகோலுக்கு கல்பட்டு அளவுகோல் என்று அழைக்கப்படுவதாகவும் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அளவுகோலுக்கு அருகில் ஒருபாதம் பெரியஅளவில் வெட்டப்பட்டுள்ளது. இதுவும் அளவை குறிக்கும் ஒரு குறியீடு ஆகும். 13 /14 ஆம் நூற்றாண்டில் இந்த அளவுகோல் கல்பட்டு பகுதியின் பொது அளவுகோலாக இருந்திருக்க வேண்டும். பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் அனைவரும் பார்க்கும்படி பாறையில் நீண்ட அளவுகோலும் அதன் குறிப்பும் கல்வெட்டாக வெட்டப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அளவுகோலுடன் கூடிய கல்வெட்டு ஒருசிலவே பதிவு செய்யப்பட்டுள்ளது. சீயமங்கலம், வேட்டவலம் அடுத்து இப்பகுதியில் கல்பட்டு அளவுகோல் முக்கியத்துவம் பெறுகிறது. இதுபோன்ற மக்கள் வழக்கில் இருந்த வரலாற்றுச் சான்றுகளான கல்வெட்டு, அளவுகோல் போன்றவற்றை ஆவணப்படுத்தி பாதுகாக்கவேண்டும் என்று வரலாற்று ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.</p>

Previous Post
Next Post




















suwnqfdzwkfrpdzlkrqyyvtllwevwz