சிங்கப் பெண் அதிரடிப்படை துவக்கம்: ரோந்து வாகனம் ஒட்டிய  முதல்வர் விஜய்! - Kumudam

முதலமைச்சராகப் பதவியேற்றவுடன் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கச் சிறப்பு அதிரடிப்படை உருவாக்கப்படும் என விஜய் உத்தரவிட்டிருந்தார். அதன்படி, சென்னை ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் இன்று மாலை நடைபெற்ற பிரமாண்ட விழாவில் இத்திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார். முன்னதாக, தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய இந்த விழாவில், பெண் காவலர்களின் சிறப்பான அணிவகுப்பு மரியாதையை முதலமைச்சர் ஏற்றுக்கொண்டார். மேலும், இந்த அதிரடிப்படைக்காக வழங்கப்பட்டுள்ள புதிய மஹிந்திரா பொலேரோ வாகனத்தை அவரே இயக்கிப் பார்வையிட்டார்.

நிகழ்ச்சியில் முதல்வர் விஜய் பேசியதாவது: மனதிற்கு நெருக்கமான ஒன்று. நமது பாட்டி, அம்மா, அக்கா, தங்கை, ஒவ்வொரு வீட்டில் உள்ள பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வோம் என்று கூறினேன். அதனை உணர்வுப்பூர்வமாகத்தான் கூறினேன். பெண்களுக்கு எதிரான குற்றங்களை பொறுத்துக்கொள்ள முடியாது. சொன்னதை எல்லாம் படிப்படியாக செய்வோம். அதில் தெளிவாக இருக்கிறோம்

பல ஆண்டுகளாக இருக்கும் பிரச்னை. பல ஆண்டுகளாக கண்டுகொள்ளாமல் இருந்ததுதான் பிரச்னை பெரிதானதற்கு காரணம். இதற்கு காரணம் யார் என்பதை நான் கூறி தெரியவேண்டும் என்பது இல்லை. போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் – ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவைதான். இது தொடர்பான பிரச்னைகளை சரி செய்ய கவனம் செலுத்த வேண்டும்.பெண்கள் பாதுகாப்பு சட்டம் – ஒழுங்கு தொடர்புடையது மட்டும்தானா? தனிமனித ஒழுக்கத்துடன் தொடர்புடையது. ஒழுக்கத்துடன் இருந்தால் பல பிரச்னைகளை கட்டுப்படுத்தலாம். இவ்வாறு அவர் பேசினார். 

அணியின் கட்டமைப்பு மற்றும் சீருடை

இந்தச் சிறப்புப் படையின் முதல் பெண் தலைமை அதிகாரியாக ஐஜி கே. பவானீஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார். இவருடன் முதற்கட்டமாக ஒரு எஸ்பி, 2 டிஎஸ்பிக்கள் மற்றும் 4 ஆய்வாளர்கள் உட்பட 30-க்கும் மேற்பட்ட போலீஸார் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த விழாவில் 500-க்கும் மேற்பட்ட பெண் காவலர்கள், அமைச்சர்கள் மற்றும் தவெக எம்.எல்.ஏ-க்கள் கலந்து கொண்டனர். பிற காவலர்களிடமிருந்து தனித்துவமாகத் தெரியும் வகையில் இவர்களுக்குக் கருநீல வண்ணச் சட்டை, காக்கி பேண்ட், கருப்பு நிறத் தொப்பி, பெல்ட் மற்றும் ஷூக்கள் அடங்கிய பிரத்யேகச் சீருடையும், புதிய இலச்சனை (லோகோ) வழங்கப்பட்டுள்ளது.

படையின் முக்கியச் செயல்பாடுகள்

சென்னையில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, விரைவில் அனைத்து மாவட்டங்களிலும் இப்படை தனது பணிகளைத் தீவிரப்படுத்தவுள்ளது. பொது இடங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளைத் தடுத்தல், குற்றங்கள் நிகழ வாய்ப்புள்ள பகுதிகளைக் கண்டறிந்து கண்காணிப்பைத் தீவிரப்படுத்துதல் மற்றும் ரோந்துப் பணிகளை மேற்கொள்வது இவர்களின் முக்கியப் பணியாகும். இதன் மூலம் காவல்துறையின் இருப்பை உறுதிசெய்து, பெண்கள் மற்றும் குழந்தைகளிடையே பாதுகாப்பான நம்பிக்கையான சூழலை உருவாக்குவதே இப்படையின் முதன்மை நோக்கமாகும்.

Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed