<h2 style="text-align: justify;">சந்திரமவுலீஸ்வரர் கோயில்</h2>
<p style="text-align: justify;">விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே திருவக்கரை கிராமத்தில் அமைந்துள்ளது வரலாற்று சிறப்பு மிக்க சந்திரமவுலீஸ்வரர் கோயில். இக்கோவில் வராக நதி என்றழைக்கப்படும் சங்கராபரணி ஆற்றின் வட கரையில், 7 நிலை ராஜ கோபுரத்துடன் கம்பீரமாக 10 ஏக்கர் நிலப்பரப்பில் கிழக்கு நோக்கி காட்சி அளிக்கிறது. இத்தலத்தில் சந்திரமவுலீஸ்வரர் என அழைக்கப்படும் இவர் எங்கும் காண முடியாத அரிவகையான மூன்று முகம் கொண்ட லிங்கமாக அருள்பாலிக்கிறார்.</p>
<p style="text-align: justify;">இக்கோவில், பழமையும், பெருமையும் வாய்ந்த திருவக்கரை என்னும் இத்திருத்தலம் தொண்டை நாட்டில் உள்ள 32 சிவத் தலங்களுள் 30வது தலமாகும். 7ம் நுாற்றாண்டுக்கு முற்பட்ட இத்திருக்கோவில் சமயக்குரவர் நால்வருள் பார்வதி தேவியிடம் ஞானப்பால் உண்ட திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற சிறப்புடையதாக திகழ்கிறது.</p>
<p style="text-align: justify;">ராஜகோபுரத்தில் நுழைந்தவுடன் வடக்கு நோக்கிய திசையில் ஸ்ரீ வக்ரகாளியம்மன் சன்னதி அமைந்துள்ளது. இதற்கு அருகே மேற்கு நோக்கி வக்ராசூரன் வழிபட்ட வக்ரலிங்கம் சன்னதி அமைந்துள்ளது. மேற்கு நோக்கி அமைந்துள்ள சிவன் சன்னதி காணப்படும். இது மிகவும் சிறப்பு வாய்ந்த கோயில் ஆகும். வக்ரகாளியம்மன் சன்னதியிலிருந்து உள்ளே மூலவர் சன்னதிக்குச் செல்லும் வழியில் வலதுபுறம் நுாற்றுக்கால் மண்டபம் உள்ளது. நுழைவாயில் நேரே பெரிய வடிவில் நந்தி அமைந்துள்ளது.</p>
<p style="text-align: justify;">இக்கோவில், ஆதித்ய சோழன் என்னும் சோழ மன்னரால் 2000 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. பின், கி.பி. 907 முதல் கி.பி 953 வரையுள்ள காலகட்டத்தில் வாழ்ந்த சிவபக்தனாக விளங்கிய முதலாம் பராந்தக சோழனின் மகனான கண்டராதித்தச் சோழனால் கி.பி 950 முதல் கி.பி 957 முடிய உள்ள காலத்தில் திருக்கோவில் கோபுரம் கட்டப்பட்டு அவரது பெயரிலேயே <strong>'</strong><strong>கண்டராதித்தன் திருக்கோபுரம்'</strong> எனவும், <strong>'</strong><strong>கண்டர் சூரியன் திருக்கோபுரம்'</strong> எனவும் அழைக்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது. கண்டராதித்தனின் மனைவியான செம்பியன் மாதேவியார் பாடல் பெற்ற கோவில்களான திருத்துருத்தி, திருக்கோடிக்கா, திருமுதுக்குன்றம், தென்குரங்காடு துறை போன்ற கோவில்களைக் கற்றளியாக்கி திருப்பணி செய்துள்ளார். அதே போல திருவக்கரை திருத்தலத்தையும் கற்றளியாக்கி சிறந்த திருப்பணி செய்துள்ளார்.</p>
<h2 style="text-align: justify;">ஊரின் நடுவே அமைந்த காளி கோவில்&nbsp;</h2>
<p style="text-align: justify;">பொதுவாக அனைத்து கிராமங்களிலும் காளி கோவில் ஊரில் எல்லையில் தான் இருக்கும். ஆனால், இங்கு ஊரின் நடுவே ராஜகோபுரத்தின் நுழைவு வாயில் அருகிலேயே வடக்கு நோக்கி அமைந்துள்ளது. வக்ராசூரன் என்னும் அரக்கன் சிவபெருமானை தனது கண்டத்தில் வைத்து பூஜை செய்தான். தனது தவ வலிமையால் தன் முன்தோன்றிய சிவனிடம் சாகா வரம் பெற்றான். தான் பெற்ற வரத்தைக்கொண்டு தேவர்கள் முதலானவர்களைக் கொடுமை செய்து வந்தான். அவற்றை தாங்க முடியாத தேவர்கள் சிவனிடம் முறையிட்டனர். சிவபெருமான் வைகுண்ட வாசன் மகாவிஷ்ணுவை அழைத்து வக்ராசூரனை வதம் செய்யும்படி கூறயுள்ளார், அவரும் சூரனுடன் போரிட்டு தனது ஸ்ரீ சக்கரத்தை வக்ராசூரன் மீது பிரயோகம் செய்து அவனை அழித்தார்.</p>
<h2 style="text-align: justify;">வக்ராசூரனின் தங்கையை அழித்ததால் வக்ரகாளியாக அங்கேயே அமர்ந்து விட்டாள்</h2>
<p style="text-align: justify;">வக்ராசூரன் தங்கையான துன்முகி தன் அண்ணனைப் போலவே கொடுஞ்செயல்புரிந்து வந்தாள். அரக்கியான அவளை வதம் செய்ய திருக்கயிலை நாதனான சிவபெருமான் பார்வதியிடம் கூற, பார்வதிதேவி அரக்கியை வதம் செய்யச் சென்றாள். ஆனால் அப்போது துன்முகி கருவுற்றிருந்தாள். சாஸ்திரமுறைப்படி கர்ப்பிணியையோ, சிசுவையோ வதம் செய்யக்கூடாது. இதனால், பார்வதிதேவி, துன்முகி வயிற்றைக் கிழித்து அவள் வயிற்றிலிருந்த சிசுவை தனது வலது காதில் குண்டலமாக அணிந்து கொண்டு, பின் துன்முகியை வதம் செய்தாள். வக்ராசூரனின் தங்கையை அழித்ததால் வக்ரகாளியாக அங்கேயே அமர்ந்து விட்டாள். வக்ர காளியாக உமாதேவி வீற்றிருக்கும் இவ்வூர் அவரது பெயராலேயே திருவக்கரை என வழங்கப்படுகிறது.</p>
<h2 style="text-align: justify;">அரூப நிலையில் அருள்பாலிக்கிறார்</h2>
<p style="text-align: justify;">கிளி கோபுரத்தைத்தாண்டி, கிழக்கு நோக்கிய நிலையில் மூலவர் சன்னதி அமைந்துள்ளது. மூலவர் இங்கு சந்திரமௌலீஸ்வரர் என்ற பெயரில் அழைக்கப்படுகிறார். இறைவன் ஈசன் அருவம், அருவுருவம் மற்றும் உருவம் என 3 நிலைகளில் அருள்பாலிக்கிறார். <strong>அதாவது இறைவன் உருவம் இல்லாத நிலையில் சிதம்பரத்தில் சிதம்பர ரகசியமான ஆகாய வெட்டவெளியாக அரூப நிலையில் அருள்பாலிக்கிறார். பெரும்பாலான சிவாலயங்களில் அருவுருவமாக</strong><strong>, </strong><strong>சிவலிங்கமாக அருள்பாலிக்கிறார்</strong>.</p>
<p style="text-align: justify;">சிவபெருமான் முழு உருவமாக நடராஜர் கோலத்தில் சிவமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அருவமாக இருக்கும் சிவ தத்துவம், அருவுருவமாகிய சிவலிங்கமாக காட்சி கொடுத்து பின் முழு உருவமாகிய சிவமூர்த்தியாக காட்சி தரும் நிலையை காஷ்மீர சைவம் <strong>'</strong><strong>அவிகார பரிணாமம்'</strong> என கூறப்படுகிறது. அதாவது விகாரம் அடைந்த ஒரு தோற்றம் என இதற்கு பொருள் உண்டு.</p>
<h2 style="text-align: justify;">கட்டமான முகலிங்கம்</h2>
<p style="text-align: justify;">சிவலிங்கத்திற்கும், சிவமூர்த்திக்கும் இடையே உள்ள கட்டமாக முகலிங்கம் கூறப்படுகிறது. அத்தகைய இடைப்பட்ட கட்டமான முகலிங்க வடிவத்தை இத்திருக்கோவிலில் காணலாம். மேலும், சுவாமி கோவிலில் மூலஸ்தானத்தில் வடபுறத்தில் நடராஜ பெருமாள் சன்னதி அமைந்துள்ளது. சுவாமி கோவிலின் உள் சுற்றில் சமயகுரவர் நால்வர் சன்னதி, தட்சணாமூர்த்தி, விநாயகர், வள்ளி, தெய்வானையுடன் சுப்ரமணியர், மற்றும் விஷ்ணு, துர்க்கை சன்னதிகள் உள்ளன. கருவறைக்கு தென் திசையில் குண்டலினி மாமுனிவர் என்னும் சித்தர் ஜீவசமாதி நிலையை அடைந்ததும் அங்கு லிங்கம் அமைக்கப்பெற்று தனிக்கோவிலாக விளங்குகிறது.</p>
<h2 style="text-align: justify;">கிரக தோஷங்கள் நீங்கும்&nbsp;</h2>
<p style="text-align: justify;">சிவன் கோவிலாக இருந்தாலும், காளியும் குடி கொண்டிருப்பதால் இத்தலம் சக்தி தலங்களில் ஒன்றாகவும் புகழ்ப்பெற்று திகழ்கிறது. மனநிம்மதி வேண்டி, கிரக தோஷங்கள் நீங்க, காரியத்தடைகள் நீங்கி சுபிட்சம் உண்டாக, பூர்வஜென்ம பாவங்கள் விலக, (வர்க்க தோசம்) புத்திர தோசங்கள் விலக, காரியத் தடைகள் நீங்க இங்கு அருள்பாலிக்கும் சிவபெருமானை பிரார்த்திக்கிறார்கள்.</p>
<h2 style="text-align: justify;">6 அடி உயரத்தில் வரதராஜ பெருமாள்</h2>
<p style="text-align: justify;">கருவறையின் பின்புறம் மேற்கு நோக்கி வரதராஜ பெருமாள் தனிக்கோவிலில் பிரயோச் சக்கரத்துடன், சங்கும் விளங்க அபய அஸ்தத்துடன் 6 அடி உயரத்தில் நின்ற கோலத்தில் எழுந்தருளியுள்ளார். சிவபெருமான் வேண்டுகோளுக்கு இணங்க சிவனிடம் சாகாவரம் பெற்ற வக்ராசூரன் என்றும் அரக்கனை ஸ்ரீ சக்கரதாரி வதம் செய்தார். அதனால் இத்தலத்தில் பெருமாள் தாயாரின்றி தனியாக பிரயோச்சக்கரத்துடன் அருள்பாலிக்கிறார். அதே போன்று மூலவர் சன்னதிக்கு பக்க வாட்டில் பெருமாள் சன்னதிக்கு பின்புறம் கிழக்கு நோக்கி சகஸ்ரலிங்கம் சன்னதியும், இதற்கு அடுத்த நவக்கிரக சன்னதியும், தெற்கு நோக்கி அம்பாள் சன்னதியும், இக்கோவிலின் நேர் எதிர் வீதியில் சுந்தரவிநாயகர் சன்னி தனிக்கோவிலாக அமைந்திருப்பது தனி சிறப்பாகும்.</p>
<p style="text-align: justify;">&nbsp;</p>

Source link


Latest News

View All

  1. Темы для взрослых широко доступен на специализированных платформах для зрелой аудитории. Выбирайте надежные сайты для взрослых для обеспечения безопасности. my…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed