<p style="text-align: justify;">தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று பெரியார் பல்கலைக்கழகத்தின் நடைபெறும் அலுவலர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக சேலம் வருகை தந்தார். இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் 11:30 மணிக்கு புறப்பட்டு 12:15 மணிக்கு தமிழக ஆளுநர் ரவி, சேலம் விமான நிலையம் வந்தடைந்தார். அங்கிருந்து கார் மூலமாக சேலம் பெரியார் பல்கலைக்கழகம் வருகை தந்தார். ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த மாணவ அமைப்பினர் பெரியார் பல்கலைக்கழகத்தில் நுழைவாயில் முன்பாக கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் தமிழக ஆளுநருக்கு எதிராகவும், சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தருக்கு எதிராகவும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. குறிப்பாக பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழா, தேசிய அளவிலான மற்றும் மாநில அளவிலான நிகழ்ச்சிகளில் பங்கேற்க மட்டுமே இதுவரை ஆளுநர் வந்த நிலையில் தற்போது எந்தவொரு நிகழ்ச்சியும் இல்லாமல் ஆளுநர் பெரியார் பல்கலைக்கழகத்திற்கு ஆய்வு கூட்டத்தில் பங்கேற்பது இதுவே முதல் முறையாகும்.</p>
<p style="text-align: justify;"><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/11/4ed54143b86c1ae53cdb416c5f92be541704974667584113_original.jpg" alt="" width="720" height="540" /></p>
<p style="text-align: justify;">சமீபத்தில், சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் அரசு விதிகளை மீறி வர்த்தக ரீதியான நிறுவனத்தை தொடங்கியதாக எழுந்த புகாரில் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஜெகநாதன் கைது செய்யப்பட்டு நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெறும் அலுவலர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக வருகை தரும் ஆளுநர், பெரியார் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் ஜெகநாதன், சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் பொறுப்பு பதிவாளர் உள்ளிட்ட புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள பேராசிரியர்களை நேரில் சந்தித்து முறைகேடு புகார் தொடர்பாக விசாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகிறது. பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜெகநாதனின் ஜாமின் மனு மீதான விசாரணை நாளை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற உள்ள நிலையில் இன்று நடைபெற்ற ஆளுநர் சந்திப்பை கண்டித்து தமிழ்நாடு மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சேலம் மாநகரில் ஆங்காங்கே போஸ்டர்கள் ஒட்டி உள்ளனர். அந்த போஸ்டரில் "பெரியார் பல்கலைக்கழகத்தின் ஊழல் வழக்கில் உள்ள துணைவேந்தருக்கு துணை போகும் ஆளுநரை கண்டிக்கிறோம்" என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.</p>
<p style="text-align: justify;"><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/11/f1ffacf417a02d9b13b2a6e05e7cb69e1704974658107113_original.jpg" alt="" width="720" height="540" /></p>
<p style="text-align: justify;">ஆளுநர் வருகையை கண்டித்து திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த மாணவ அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ஆளுநரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்திய 500க்கும் மேற்பட்டோர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், தமிழ்நாடு ஆளுநர் ரவி, பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற அலுவலர்கள் கூட்டத்தை முடித்துக் கொண்டு சாலை மார்க்கமாக காரில் கோவை புறப்பட்டு சென்றார்.</p>
<p style="text-align: justify;">தமிழக ஆளுநர் வருகையை முன்னிட்டு சேலம் விமான நிலையத்திலிருந்து பெரியார் பல்கலைக்கழகம் வரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் சேலம் மாநகர காவல் ஆணையாளர் விஜயகுமாரி தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.&nbsp;</p>
<p style="text-align: justify;">இது மட்டுமின்றி சென்னையில் இருந்து சேலம் வருகை தந்த தமிழக ஆளுநர் பயணிக்கும் விமானத்தில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வருகை தந்தது குறிப்பிடத்தக்கது.</p>

Source link


Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed