அரசியல் கட்சிகள் முதல் சங்கராச்சாரியார்கள் வரை! ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை புறக்கணிக்கபோவது யார்?


<p>அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமான பணிகள் வேகமாக நடந்து வரும் நிலையில், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், வரும் ஜனவரி மாதம் 22ஆம் தேதி கோயில் திறக்கப்பட உள்ளது. கோயில் திறப்பு விழாவின்போது, ராமர் கோயிலின் கருவறையில் ராமர் சிலையை பிரதமர் மோடி நிறுவ உள்ளார்.&nbsp;</p>
<p>கோயில் கும்பாபிஷேகத்துக்கு 136 சனாதன பாரம்பரியங்களைச் சேர்ந்த 25,000 இந்து மதத் தலைவர்களை அழைக்க அறக்கட்டளை திட்டமிட்டுள்ளது. கும்பாபிஷேக விழாவில் 25,000 துறவிகளை தவிர, கூடுதலாக 10,000 சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொள்வார்கள் எனக் கூறப்படுகிறது.&nbsp;</p>
<p>இந்து மத தலைவர்களை தவிர, அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர்கள், விளையாட்டு வீரர்களுக்கும் திறப்பு விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது. அந்த வகையில், காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், அரைகுறையாக கட்டப்பட்டுள்ள கோயிலை அரசியல் லாபத்திற்காக திறக்கப்படுவதாகக் கூறி பல கட்சிகள், அழைப்பை நிராகரித்துள்ளன.</p>
<h2><strong>காங்கிரஸ்:</strong></h2>
<p>அழைப்பை நிராகரித்த காங்கிரஸ், "நம் நாட்டில் லட்சக்கணக்கானோர் ராமரை வழிபடுகிறார்கள். மதம் என்பது தனிப்பட்ட விஷயம். ஆனால், அயோத்தி கோயில் விவகாரத்தை ஆர்எஸ்எஸ்/பாஜக நீண்ட காலமாக அரசியலாக்கி வருகிறது. அரசியல் ஆதாயத்திற்காக மட்டுமே முழுமையடையாத கோயிலை பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் தலைவர்கள் திறந்து வைக்கின்றனர்.&nbsp;</p>
<p>கடந்த 2019 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குக் கட்டுப்பட்டு, ராமரை வணங்கும் கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, மல்லிகார்ஜுன் கார்கே, &nbsp;சோனியா காந்தி மற்றும் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோர் ஆர்எஸ்எஸ்/பாஜக நிகழ்ச்சிக்கான அழைப்பை மரியாதையுடன் நிராகரித்துள்ளனர்" என குறிப்பிட்டுள்ளது.</p>
<h2><strong>மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்:</strong></h2>
<p>அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க மாட்டோம் என அறிவித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, "மதம் என்பது ஒவ்வொரு தனி நபரின் தனிப்பட்ட தேர்வு. ஒவ்வொருவரின் மத நம்பிக்கையையும் நாங்கள் மதிக்கிறோம். பாதுகாக்கிறோம். இந்திய அரசியலமைப்பின்படியும், உச்ச நீதிமன்ற உத்தரவுகளின்படியும், அரசு எந்த ஒரு குறிப்பிட்ட மதத்தையும் பின்பற்றக் கூடாது.&nbsp;</p>
<p>ஆனால், இந்த பிரதிஷ்டை விழாவில் என்ன நடக்கிறது? பிரதமர் நரேந்திர மோடி, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யாநாத் போன்ற அரசியல் சாசனப் பதவிகளை வகிப்பவர்கள் நடத்தும் அரசு விழாவாக இது மாற்றப்பட்டுள்ளது. இது மக்களின் மத நம்பிக்கையை நேரடியாக அரசியலாக்கும் செயல். இது அரசியல் சாசனத்துக்கு எதிரானது. இந்தச் சூழல் காரணமாக, இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இயலாதது வருத்தம் அளிக்கிறது" என்றார்.</p>
<h2><strong>திரிணாமுல் காங்கிரஸ்:</strong></h2>
<p>"மக்களை மத அடிப்படையில் பிரிப்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. அனைத்து சமூகத்தினரையும் ஒன்றிணைத்து ஒற்றுமையைப் பற்றி பேசும் விழாக்களை நான் நம்புகிறேன். மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக ராமர் கோயில் திறப்பு விழாவின் மூலம் பாஜக வித்தை காட்டி வருகிறது&rdquo; என மேற்கு வங்க முதலமைச்சரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.</p>
<h2><strong>சமாஜ்வாதி:</strong></h2>
<p>"ராமர் கோயிலுக்கான அழைப்பிதழை கொடுக்க அவர்கள் தகுதியற்றவர்கள். இந்த விழாவில் கலந்து கொள்வதைப் பொறுத்த வரையில், கடவுளின் சார்பாக எனக்கு இப்படியொரு அழைப்பிதழை அனுப்ப பாஜக யார்? கடவுள் என்னை அழைத்தால் மட்டுமே எனது குடும்ப உறுப்பினர்களுடன் கோயிலுக்கு சென்று வழிபடுவேன்" என அழைப்பை நிராகரித்துள்ளார் சமாஜ்வாதி கட்சி தலைவரும் உத்தர பிரதேச முன்னாள் முதலமைச்சருமான அகிலேஷ் யாதவ்.</p>
<h2><strong>சங்கராச்சாரியார்கள்:</strong></h2>
<p>அரசியல் கட்சி தலைவர்களை தவிர இந்து மத மடாதிபதிகளும் ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க மாட்டோம் என அறிவித்துள்ளனர். இதுகுறித்து பேசிய பூரி சங்கராச்சாரியார் சுவாமி நிச்சலானந்த சரஸ்வதி, "கோயிலில் சிலையை தொட்டு பிரதமர் மோடி பிரதிஷ்டை செய்வார், நான் அங்கு சென்று கை தட்டு கொண்டு இருக்க வேண்டுமா?</p>
<p>அயோத்தியில் பிரதமரே அனைத்தையும் செய்துவிட்டால் மதகுருமார்களுக்கு செய்வதற்கு மிச்சம் என்ன இருக்கிறது என்பதை மக்கள் யோசிக்க வேண்டும். சனாதன தர்மத்தை மதிப்பதற்கும் மதச்சார்பற்ற தலைவராக பிரதமர் தன்னை சித்தரித்து கொள்ளாமல் இருப்பதற்கும் பாராட்டுகள். ஆனால், மதகுருமார்கள் செய்யும் யோகாவையும் பிரதிஷ்டை விழா முதற்கொண்டு அனைத்தையும் பிரதமரே செய்துவிடுகிறார்" என்றார்.</p>
<p>இதே கருத்தை முன்வைக்கும் உத்தரகாண்ட் சங்கராச்சாரியார் சுவாமி அவி முக்தீஸ்வரானந்த் சரஸ்வதி, "அரசியல் லாபத்திற்காக மட்டுமே அரைகுறையாக கட்டுப்பட்டுள்ள ராமர் கோயில் திறக்கப்படுகிறது. அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் பாரம்பரியத்தை பின்பற்றவில்லை.&nbsp;</p>
<h2><strong>எதிர்க்கட்சிகளை சாடும் பாஜக:&nbsp;</strong></h2>
<p>இந்தியாவை பொறுத்தவரையில் மன்னர்களும் மதகுருமார்களும் வேறு வேறு ஆட்களாகவே இருந்துள்ளனர். ஆனால், தற்போது, அரசியல் தலைவர், மதத்தின் தலைவராக ஆக்கப்பட்டுள்ளார். இது பாரம்பரியத்துக்கு எதிரானது. அரசியல் லாபத்திற்காக செய்யப்படுகிறது" என்றார்.</p>
<p>ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க மாட்டோம் என அறிவித்துள்ள எதிர்கட்சிகளின் முடிவுக்கு பாஜக கடுமையாக எதிர்வினையாற்றியுள்ளது. "ராமர் கோயில் பிரதிஷ்டை விழாவிற்கான அழைப்பை நிராகரித்த சனாதன எதிர்ப்பாளர்களின் முகங்களை பாருங்கள்" என எக்ஸ் வலைதளத்தில் எதிர்க்கட்சி தலைவர்களின் புகைப்படத்தோடு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.</p>
<p>&nbsp;</p>

Source link