பசுபதியாக சம்பத்ராஜ் நடித்திருந்தார். தென்னிந்திய மொழிப் படங்களில் ஒரு தேர்ந்த குணச்சித்திர நடிகராக வலம் வரும் சம்பத்துக்கு இந்தப் படம் குறிப்பிடத்தகுந்த ஒன்றாக அமைந்தது. 1980-களிலிருந்து பிரபலமான இந்தி நடிகராக விளங்கிவரும் ஜாக்கி ஷெராஃப் நடித்த முதல் தமிழ்ப் படம் இது. சிங்கபெருமாள் கதாபாத்திரத்தில் வித்தியாசமான நடிப்பை அவர் வெளிப்படுத்தியிருந்தார்.
சப்பையாக ரவி கிருஷ்ணா, சுப்புவாக யாஸ்மின், கஜேந்திரனாக பாக்சர் ஆறுமுகம், கஜபதியாக தீனா ஆகியோர் நடித்திருந்தார்கள். கூத்துப்பட்டறைக் கலைஞரான குரு சோமசுந்தரம் காளையன் பாத்திரத்தில் இந்தப் படத்தின் மூலமாக சினிமாவுக்கு அறிமுகமானார். இடம் பொருள் ஏவல் உணராது, வெள்ளந்தியாக பேசிக்கொண்டு திரியும் காளையன் பாத்திரத்துக்கு ஒரு தனித்தன்மையைக் கொடுத்தார் குரு சோமசுந்தரம்.

உயிருக்குப் பயந்து ஓடிக்கொண்டிருக்கும் போது கூட பசுபதியால் சிந்திக்க முடிகிறது. ’புத்தனுக்குப் போதிமரம் போல, ஒரு கேங்ஸ்டருக்கு சேஸிங்’ என்று சொல்கிறான். இது பொதுவாக சாத்தியமில்லாத ஒன்று. ஒருவேளை யாருக்கோ சாத்தியப்படவும் செய்யலாம். ‘கஸ்தூரி ஆபத்திலிருக்கிறாள். சரக்கைக் காணவில்லை. சிங்கபெருமாள் நம்மைக் கொலை செய்யப்பார்க்கிறான். எதிரிக்கு எதிரி நண்பன், பேசாமல் கஜேந்திரனோடு சேர்ந்துவிடலாம் என்றால் அவனது ஆட்களும் நம்மைத் துரத்திக்கொண்டிருக்கிறார்கள். என்னதான் நடக்கிறது’ என்று சிந்திக்கத் தொடங்குகிறான் பசுபதி.
ஓடிக்கொண்டிருக்கும் போதே அதிலிருந்து தப்பிக்க ஒரு திட்டமும் அவன் மனதுக்குள் தயாராகிறது. அதனால்தான் அந்த மெலோடி இசை வருகிறது. நடக்கும் காட்சிக்குப் பொருத்தமான இசையைக் கேட்டே நாம் பழகியிருக்கிறோம். ஆனால், அது பசுபதி எனும் ஆளின் மனதுக்குள் நடக்கும் சிந்தனைக்குப் பொருத்தமான இசை அது.
இசை யுவன்ஷங்கர் ராஜா. படத்துக்காக முதலில் ஓரிரு பாடல்கள் திட்டமிடப்பட்டு, பின்னர் கைவிடப்பட்டன. சுப்பு இறந்துபோவதான படத்தின் முடிவும் பின்னர் மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது. இந்த முடிவுகள் இந்தப் படத்தின் இன்றைய கல்ட் கிளாஸிக் தன்மைக்கு மிக முக்கியமான காரணமாக அமைந்தன என்றும் சொல்லலாம். மிகக்குறைவான இடங்களில் மட்டுமே பின்னணி இசை சேர்க்கப்பட்டிருந்தது. பெரும்பாலும் சூழல் ஒலிகளும், ரெட்ரோ பாடல்களும் பயன்படுத்தப்பட்டிருந்தன. ரெட்ரோ பாடல்களைப் பெருமளவு பயன்படுத்தும் நுணுக்கத்தை, இந்தப் படம் தொடங்கி வைத்தது.
























