அமெரிக்கா, வெனிசுலாவின் 65 பில்லியன் பேரல் நிரூபிக்கப்பட்ட எண்ணெய் இருப்பில் பெரும்பான்மைக் கட்டுப்பாட்டைப் பெறும் புதிய ஒப்பந்தத்தை அறிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இதை “உலக வரலாற்றிலேயே மிகப்பெரிய எண்ணெய் ஒப்பந்தம்” என கூறியுள்ள நிலையில், அமெரிக்காவின் எரிசக்தித் தேவையையும் வெனிசுலாவின் எண்ணெய்த் துறையை மீட்டெடுப்பதையும் இலக்காகக் கொண்டு இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின்படி, வெனிசுலாவின் 17 முக்கிய எண்ணெய் வயல்களை மேம்படுத்தத் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து அமெரிக்கா செயல்படவுள்ளது. 65 பில்லியன் பேரல் எண்ணெய் இருப்பின் மீது பெரும்பான்மைக் கட்டுப்பாடு கிடைக்கும் என்றும், இதற்காக அமெரிக்க வரி செலுத்துவோரின் பணம் பயன்படுத்தப்படாது என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார். வெனிசுலா இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸும் இந்த ஒப்பந்தத்தை வரவேற்றுள்ளார்.

அமெரிக்காவுக்கு ஏன் வெனிசுலா தேவை ?
இதற்கு முக்கிய காரணம் வெனிசுலாவின் எண்ணெய் வளம். அந்நாட்டில் சுமார் 303 பில்லியன் பேரல் நிரூபிக்கப்பட்ட கச்சா எண்ணெய் இருப்பதாக மதிப்பிடப்படுகிறது. இது உலகின் மொத்த எண்ணெய் இருப்பில் சுமார் 17 சதவிகிதம். ஆனால் பல ஆண்டுகளாக ஏற்பட்ட அரசியல் நெருக்கடி, முதலீட்டுக் குறைவு மற்றும் பழுதடைந்த உள்கட்டமைப்பு காரணமாக, இவ்வளவு பெரிய வளம் இருந்தும் வெனிசுலாவின் உற்பத்தித் திறன் மிகவும் குறைந்துள்ளது.
அதோடு, மத்திய கிழக்கில் நீடிக்கும் மோதல் காரணமாக எண்ணெய் விநியோகத்தில் ஏற்பட்ட அழுத்தமும் அமெரிக்காவை மாற்று விநியோக ஆதாரங்களை நோக்கித் தள்ளியுள்ளது. குறிப்பாக அமெரிக்காவின் “ஸ்ட்ராடஜிக் பெட்ரோலியம் ரிசர்வ்’ (Strategic Petroleum Reserve) கையிருப்பு இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து கணிசமாகக் குறைந்துள்ள நிலையில், வெனிசுலா எண்ணெய் அமெரிக்காவுக்கு முக்கியமானதாகியுள்ளது.
டிரம்ப் இந்த ஒப்பந்தம் அமெரிக்காவில் பெட்ரோல் விலையைக் குறைக்க உதவும் என்றும் கூறியுள்ளார். மறுபுறம், வெனிசுலா தரப்பில் 100 பில்லியன் டாலருக்கும் அதிகமான தனியார் முதலீடு கிடைக்கும் என்றும், அதன் எண்ணெய்த் துறையை மீண்டும் கட்டியெழுப்ப இது உதவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.























