Ayodhya Ram Mandir: அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழாவை ஒட்டி ஜனவரி 22ம் தேதி அன்று, உத்தரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு:
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அயோத்தியில் ராமர் கோயில் பிரமாண்டமாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த கோயிலின் குடமுழுக்கு விழாவானது, வரும் 22ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இது நாடு முழுவதும் உள்ள ஒட்டுமொத்த இந்துக்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற உள்ள இந்த விழாவில், அரசியல், சினிமா, தொழில்துறை மற்றும் விளையாட்டுத்துறையைச் சேர்ந்த பல முக்கிய பிரமுகர்களும் பங்கேற்க உள்ளனர். இதனிடையே, குடமுழுக்கு விழா தொடர்பான கொண்டாட்டங்களின் போது, பொதுமக்கள் தங்களது குடும்பத்தினருடன் இருக்கும் நோக்கில் பல மாநிலங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஜனவரி 22ம் தேதியன்று விடுமுறை அளித்துள்ள மாநிலங்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
உத்தரபிரதேசம்:
ராமர் கோயில் அமைந்துள்ள உத்தரபிரதேச மாநிலமே முற்றிலும் விழாக்கோலம் பூண்டுள்ளது. இந்த விழாவை கோலாகலமாக கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து உத்தரபிரதேசத்தில் உள்ள அனைத்து கல்வி நிலையங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு ஜனவரி 22ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாளை தீபாவளி போன்ற பொதுமக்கள் உற்சாகமாக கொண்டாட முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வலியுறுத்தியுள்ளார்.
கோவா:
உத்தரப் பிரதேசத்தை தொடர்ந்து கோவாவிலும் ராமர் கோயில் குடமுழுக்கினை கொண்டாட, ஜனவரி 22ம் தேதியன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. குழந்தை ராமர் சிலையை நிறுவுவது என்பது நாடு தழுவிய உற்சாக நிகழ்வு என கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார். அன்றைய நாளை தீபாவளியை போன்று கொண்டாடவும் பொதுமக்களுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
மத்திய பிரதேசம்:
மத்தியப் பிரதேசத்தின் அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளுக்கு ஜனவரி 22 ஆம் தேதி பொது விடுமுறை தினமாக அறிவித்து, பண்டிகை அலைகளை ஊக்கப்படுத்தியுள்ளார் முதலமைச்சர் மோகன் யாதவ். மேலும், மாநிலத்தில் உள்ள மதுபானக் கடைகள் மற்றும் இறைச்சிக் கடைகளும் அன்றைய நாளில் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சத்தீஸ்கர்:
ராமர் கோயில் குடமுழுக்கு விழாவை உற்சாகமாக கொண்டாடும் வகையில், சத்தீஸ்கரிலும் ஜனவரி 22ம் தேதி அன்று அரசு பொது விடுமுறையை அறிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு நடவடிக்கையாக, அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹரியானா:
நாடு தழுவிய கொண்டாட்ட அலையில் சேரும் நோக்கில், ஹரியானாவிலும் ஜனவரி 22ம் தேதி அனைத்து பள்ளிகளும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புனித விழாவையொட்டி அன்றைய நாளில் மது விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
Ahead Of Ayodhya Ram Mandir Celebration These States Have Declared A Holiday On January 22 Check The List

