கோவை விமான நிலையத்தில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழக சட்டமன்றத்தில் நடைபெறும் நிகழ்வுகள் சினிமாவில் சட்டமன்ற காட்சி எப்படி இருக்குமோ, அதுபோலத்தான் இருக்கின்றன. சட்டமன்ற நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்தால்தான், ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும் தங்களது தொகுதி பிரச்னைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு வருவது மக்களுக்கு தெரியவரும். சில அமைச்சர்கள் மட்டுமே கேள்விகளுக்கு பதில் அளிக்கின்றனர். அந்தந்த துறைகளுக்கான கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட அமைச்சர்களே பதில் அளிக்க வேண்டும்.
சபாநாயகர் தற்போது 10 மணி நேரம் சட்டமன்றத்தை நடத்துகிறார். அடுத்து 24 மணி நேரம் நடத்தினாலும் நடத்துவார் போல தெரிகிறது. சட்டமன்றத்தை குறிப்பிட்ட நேரத்தில் முடிக்க வேண்டும். காவல்துறை மானியக் கோரிக்கையின்போது, சட்டம் ஒழுங்கு தொடர்பான பல்வேறு பிரச்னைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வோம். த.வெ.க அரசு ஆட்சிப் பொறுப்பேற்று 110 நாட்களே ஆகியுள்ள நிலையில், சட்டம் ஒழுங்கு முழுமையாக சீர்குலைந்துள்ளது. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, போதைப்பொருள் நடமாட்டம், பாலியல் குற்றங்கள் உள்ளிட்ட சம்பவங்கள் அதிகரித்துள்ளது. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு இதுபோன்ற சம்பவங்களுக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியவர்கள், ஆட்சிக்கு வந்த பிறகு நிர்வாக சீர்கேட்டின் காரணமாக குற்றச்சம்பவங்கள் அதிகரிக்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளனர்.

























