‘தொகுதி மறுவரையறை விவாதம்…’
உதயநிதி ஸ்டாலின்: நேற்று முதல்வர் பேசிய விஷயத்தில் எங்கும் 543 உறுப்பினர்கள் எண்ணிக்கை நிரந்தரமாக்கபட வேண்டும் என்று எங்கும் இடம்பெறவில்லை.
ஆதவ் அர்ஜுனா: தொகுதி மறுவரையரை விவகாரத்தில் திமுகவின் நிலைப்பாடு மாறுவதாக தெரிகிறது. 50 சதவீதம் அதிகப்படுத்தப் போகிறோம் என்று சொன்னால் அந்த வலையில் சென்று திமுக வீழ்ந்துவிடக் கூடாது.
பாமக கணேஷ்குமார்: அமெரிக்காவில் இருக்கும் நடைமுறை வேறு. முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் 7.18 சதவீதத்திற்கு குறைவாக பிரதிநிதிதுவம் இருக்க கூடாது என்று நீங்கள் (த.வெ.க, காங்கிரஸ்) ஒத்துக்கொண்டு கையெழுத்திட்டுள்ளனர். காங்கிரஸ் Fair delimitation என்றுதான் போராடி வந்தனர்; ஆனால், இப்போது NO Delimitation என்று தங்களுடைய நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளனர்.
ஆதவ் அர்ஜுனா: 7.18 என்பது மக்கள்தொகையில் கொடுக்கப்பட்டதுதான். GDPயில் இரண்டாமிடம் இடத்தில் இருக்கும் தமிழ்நாட்டிற்கு இன்னும் அதிகமான இடங்கள் கிடைக்கும் படி ஒரு சிறப்பு சட்டத்தைக் கொண்டு வந்திருக்கலாமே! ஏன் செய்யவில்லை? 50 சதவீத உயர்வுக்கு ஆதரவு தெரிவித்துவிடக் கூடாது. அதைதான் நான் சொல்கிறேன். மாநில உரிமைக்காக அனைவரும் ஒன்றாக இணைந்து நிற்க வேண்டும்.
கே.என்.நேரு: 7.18 பாதிக்கப்படக் கூடாது என்பதுதான் திமுகவின் கொள்கை.
நிர்மல்குமார்: இந்த சட்டம் கொண்டுவரப்பட்டால் திமுக எதிர்க்கும் என ஒரு வார்த்தைக் கூட சொல்லவில்லை. அதுதான் எங்களுக்கு சந்தேகமாக உள்ளது.
‘தொகுதி மறுவரையறை விவாதம்!’
தொகுதி மறுவரையறை பற்றி பத்திரிகைகளில் போலிச் செய்தி பரவி வருகிறது. சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தில் முதல்வர் விஜய் உறுதியாக இருக்கிறார். நமக்கு Fair Delimitation தேவை இல்லை. Freeze Delimitation தான் தேவை.
– ஆதவ்
தென் மண்டல நிர்வாகக் குழு கூட்டத்தில் முதல்வர் விஜய் Freeze Delimitation என பேசவில்லை.
– உதயநிதி
அந்த கவுன்சில் கூட்டத்தில் என்ன பேச முடியுமோ அதைத்தான் பேச முடியும். வெளியே வேறு கோணத்தில் தகவல் பரவுகிறது. நேற்றே கட்சி சார்பில் நான் அதை மறுத்துவிட்டேன்.
– சி.டி.ஆர்.நிர்மல் குமார்
தொகுதி மறுவரையறைக்கான காலக்கெடு டிசம்பரோடு முடிகிறது. அதற்குள் மத்திய அரசு சட்டம் இயற்றி தொகுதி மறுவரையறையை தள்ளிப்போடவில்லை எனில், மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மறுவரையறை செய்தால் நமக்கான எண்ணிக்கை குறையும்.
– எடப்பாடி பழனிசாமி
தொகுதி மறுவரையறையில் 543 என்ற எண்ணிக்கையை அப்படியே வைக்க வேண்டும் அல்லது தமிழகத்தின் 7.18% பிரதிநிதித்துவ சதவீதம் குறையக்கூடாது என்பதுதான் எங்களின் நிலைப்பாடு.
– உதயநிதி
திமுக தேர்தலுக்கு முன்பு தொகுதி மறுவரையறையை எதிர்த்து மசோதாவை கொளுத்தியது. ஆனால், இன்று அவர்களின் நிலைப்பாடு மாறுவதை போல தெரிகிறது. அண்ணாவின் மாநில சுயாட்சி கொள்கைப்படி திமுகவின் அத்தனை எம்.பி.க்களும் அவையிலிருந்து தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும்.
– ஆதவ்
“முதல்வர் சிரிப்பதை வீட்டிற்கு சென்றுதான் பார்க்கிறோம்.. இங்கேயே ஒரு Screen வைத்துக்கொடுதால் நன்றாக இருக்கும்” – தவெக எம்எல்ஏ கல்லாணை
“கலைஞர் 300 க்கும் அதிகமான யூனியன் சேர்மேன்களுக்கு கார் வழங்கினார், அப்போது.!”- ஏ. எம். ஷாஜகான் கேள்வி
“சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் தேவைஏ என்பது சர்ச்சையாகப் பேசப்படுகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு முன்னாள் முதல்வர் கலைஞர் 300 க்கும் அதிகமான யூனியன் சேர்மேன்களுக்கு அரசு சார்பில் வாகனம் வழங்கப்பட்டது. இது ஒன்றும் புதிதல்ல. அப்போதும் நிதி நிலைமை இப்படி தான் இருந்தது. அப்போது எல்லாம் கேள்வி கேட்காமல் இப்போது கேள்வி கேட்பது என்பது சரியானது கிடையாது” – சிறுபான்மைத்துறை அமைச்சர் ஏ. எம். ஷாஜகான்
“எங்களுக்கு கார் வேண்டாம்”- கம்யூனிஸ்ட் எம்எல்ஏ டி.இராமசந்திரன்
“சில சட்டமன்ற உறுப்பினர்கள் கார் வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். முதல்வரும் அறிவித்திருக்கிறார். இல்லாதவர்களுக்கு கொடுக்கட்டும். எங்களைப் பொறுத்தவரை கார் வேண்டாம் என்பது எங்கள் நிலைப்பாடு” – கம்யூனிஸ்ட் எம்எல்ஏ டி.இராமசந்திரன்
“வீடு வேண்டாம் என எழுதிக் கொடுங்க”- கே.என்.நேரு

“கார் வேண்டாம் என்று தான் சொல்கிறோம், அரசுக்கு செலவு வைக்க வேண்டாம் என்பதால் சொல்கிறோம். எங்கள் வேட்புமனுவை குறிப்பிட்டு பேசினால், வேண்டுமானால் வழக்கு போடுங்கள். அமைச்சர் சொந்த வீட்டில் இருக்கிறார், ஆனால் அவர் வீட்டுக்கு அரசு வாடகை செலுத்துகிறது. வீடு வேண்டாம் என எழுதிக் கொடுங்கள்”- அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு கே.என்.நேரு பதில்
சட்டமன்றத்தில் கார் மீதான காரசார விவாதம்!
“எங்கள் முதல்வரின் நோக்கம்… இந்த சட்டமன்றத்தில் ஏழ்மையாக இருக்கக்கூடிய சட்டமன்ற உறுப்பினர்களும் இருக்கிறார்கள். குறிப்பாக விசிக சட்டமன்ற உறுப்பினர் ஊரில் இருந்து வரும்போது பஸ்ஸில் தான் வருகிறார். அவர் கோரிக்கை வைத்தார். அதனால் அனைவருக்கும் சமமாக செயல்பட வேண்டும் என்று எங்கள் முதல்வர் அறிவித்தார். தவெகவில் இருக்கும் சில உறுப்பினர்களும் அந்த வாகனத்தை வாங்கப்போவதில்லை.

எங்கள் நிலைப்பாடும் அதுதான். எங்களிடம் 2, 3 கார் இருக்கிறது என்றால் நாங்களும் காரெல்லாம் கேட்கமாட்டோம். மன்னார்குடி எம்எல்ஏ சொன்னார் என்னிடம் 4 கார் இருக்கிறது. ஆனால் முதல்வர் கொடுத்த அரசு காரில் சென்றால் மரியாதையாக இருக்கும் என்றார். எதிர்கட்சி தலைவரிடம் 2,3 வீடுகள் இருக்கிறது. ஆனால் அவர் அரசு பங்காளவில் இருக்கிறார் அல்லவா? அரசு பங்களாவில் வசிப்பதற்கானக் கடிதத்தை என்னிடம் தான் கொடுத்தார். மக்களைச் சந்திக்க எம்எல்ஏக்களுக்கு கார் தேவை” – ஆதவ் அர்ஜுனா
“திமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் வேண்டாம், ஏற்கெனவே நிதி நெருக்கடி என்று.!”- உதயநிதி ஸ்டாலின்
“அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வாகனம் (கார்) வழங்குவதாக அறிவித்திருக்கிறீர்கள். ஆனால் முதல்வர் ஏற்கெனவே தமிழக அரசு நிதி நெருக்கடியில் இருப்பதாகக் கூறி வருகிறார். அதனால் எங்கள் தலைவரின் அறிவுறுத்தலின் படி திமுகவைச் சேர்ந்த 59 சட்டமன்ற உறுப்பினர்களும் இந்த வாகனத்தை பெற வேண்டாம் என்று முடிவு எடுத்திருக்கிறோம். மேலும் அரசுக்கு ஏற்படுகின்ற தேவையற்ற செலவை குறைகின்ற நோக்கத்தில் வைத்துக்கொண்டு பொருளாதாரத்தில் நலிவடைந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மட்டுமே கார் வழங்க வேண்டும்” – உதயநிதி ஸ்டாலின்
“நான் ஒரு கோரிக்கை வைக்கிறேன். எதிர்கட்சியினர் தொடர்ச்சியாக கமென்ட் அடிப்பது, ஒருமையில் பேசுவது, கடைசியில் அமர்ந்திருந்த டாக்டர் நடுவில் ஓடிவருவது இதையெல்லாம் நம்முடைய கேமரா டீம் நேரலையில் காட்டுங்கள்”- அமைச்சர் ராஜ்மோகன்
அமளியில் திமுக, தவெக உறுப்பினர்கள்!

“நடவடிக்கை எடுப்பேன் போன்ற உருட்டல், மிரட்டல்களுக்கு எல்லாம் பயப்பட மாட்டோம் ஆவணங்களை முதல்வர் திறந்து பார்க்க வேண்டும். தவறு இருந்தால் நடவடிக்கை எடுக்கட்டும். சினிமாவில் பஞ்ச் டயலாக் பேசுவது போல் சட்டமன்றத்தில் பேசுவது சரியாக இருக்காது” என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேச தவெகவினர் அமளியில் ஈடுபட திமுகவினரும் அமளியில் ஈடுபட்டனர்.
“ஒரு கேள்வி கேட்டால் நாங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு பதில் சொல்கிறார்கள்”- உதயநிதி ஸ்டாலின்
“ஜோசியம் என்று உதயநிதி ஸ்டாலின் சொன்னார். ஜோசியம் பார்த்து மஞ்சத்துண்டு அணிந்தது எல்லாம் தமிழ்நாடு ஏற்கெனவே பார்த்துவிட்டது. எதை செய்தாலும் வெளிப்படையாக எங்களுக்கு செய்ய தெரியும். ஒவ்வொரு துறையிலும் என்ன தவறுகள் நடந்திருக்கிறதோ அதற்கெல்லாம் வழக்கு பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுத்து வருகிறோம்” என்று சிடிஆர் நிர்மல் பேசினார்.

அதற்கு பதில் அளித்த உதயநிதி ஸ்டாலின், ” இதை தான் நான் ஏற்கெனவே குறிப்பிட்டேன். ஒரு கேள்வி கேட்டால் நாங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு பதில் சொல்கிறார்கள். ஜோசியக்காரர் என்று சொல்வது தவறு என்று சொல்கிறீர்கள். ஜோசியக்காரர் அப்பாயின்மென்ட் கொடுத்து அதை நீக்கவும் செய்திருக்கிறீர்கள். ஜோசியக்காரர் என்பது தவறான வார்த்தைக் கிடையாது. சட்டமன்றத்தில் கேள்வி நேரத்தை முதன் முறையாக ஒளிப்பரப்பு செய்தது நாங்கள். அவைக்குறிப்பில் இருந்து நீங்கள் (சபாநாயகர்) நீக்குகிறேன், நீக்குகிறேன் என்று சொல்கிறீர்கள். ஆனால் அங்கு எல்லாமே ரீல்ஸாக மாற்றப்பட்டு பரப்பப்படுகிறது” என்று பேசியிருக்கிறார்.
“ஜோசியக்காரர் சொன்னால் தான் அந்தக் கோப்புகளைத் திறந்து பார்ப்பீர்களா?”- உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின் “நேற்று முன்தினம் பேரவையில் பேசிய முதல்வர் 3 கோப்புகள் இருப்பதாகவும் அதை திறந்து காண்பிக்க வைத்திராதீர்கள் என்று எங்கள் அரசை குற்றம் சாட்டும் வகையில் பேசியிருந்தார். தயவு செய்து அந்தக் கோப்புகளைத் திறந்து பார்க்க வேண்டும். அவர் நடவடிக்கை எடுக்க வேண்டும். எதற்காக பயப்படுகிறீர்கள், காலம் தாழ்த்துகிறீர்கள். ஜோசியக்காரர் சொன்னால் தான் அந்தக் கோப்புகளைத் திறந்து பார்ப்பீர்களா? நல்ல நேரம் பார்த்துக்கொண்டிருக்கிறீர்களா?” என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த ஆதவ் அர்ஜுனா, “திமுக மூத்த உறுப்பினர் ஒருவர் சொன்னார் நாங்கள் மிசாவையே பார்த்த இயக்கம் என்று… ஆனால் மிசாவையே பார்த்த திமுக இயக்கத்தை தனிப்பெரும் கட்சியாக எங்கள் தலைவர் வெற்றி பெற்று தவெக என்றால் என்னவென்று காண்பித்திருக்கிறோம். அதனால் எங்களுக்கு எந்த பயமும் கிடையாது. ஒவ்வொரு துறையிலும் நிச்சயமாக வெள்ளை அறிக்கை வெளியிட்டு நடவடிக்கை எடுப்போம் என்று எங்கள் முதல்வர் சொன்னார்.
கடந்த 5 ஆண்டுகளில் திமுக என்ன ரீல்ஸ் செய்தார்கள். என்ன பாட்டுப்பாடினார்கள். பாராளுமன்றத்திலே பதவிப்பிரமாணம் செய்தபோது பெரியாரை பற்றியோ, அண்ணாவை பற்றியோ பேசவில்லை. யாரை பற்றி பேசி பதவிப்பிரமாணம் செய்தார்கள் என்று மக்களுக்கு தெரியும். 25 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சியில் இருந்துள்ளீர்கள். பேரவை நிகழ்வை ஏன் நேரலை செய்யவில்லை; பேரவை நிகழ்வை நேரலை செய்ய திமுகவிற்கு தைரியம் இல்லை. ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டுமென்று தைரியமாக நேரலையை கொடுத்தவர் எங்கள் முதல்வர்” என்று ஆதங்கமாகப் பேசினார்.
“அதற்கு எங்களுடைய வாழ்த்துகள்.!”- சபாநாயகரை பாராட்டிய உதயநிதி ஸ்டாலின்
சட்டப்பேரவையில் பேசிய எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், “இந்த அவையை முடிந்த அளவுக்கு நீங்கள் (சபாநாயகர்) சிறப்பாக வழி நடத்தி செல்கிறீர்கள். எங்களுக்கும் கேள்வி கேட்பதற்கான வாய்ப்பையும் நீங்கள் தருகிறீர்கள். எங்களை விட அதிகமாக ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கு கேள்வி கேட்க வாய்ப்பு தருகிறீர்கள். ஆனால் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் ஆதாரம் இல்லாமல் எங்கள் மீது குற்றச்சாட்டை வைக்கிறார்கள். அப்படி அவர்கள் பேசும்போது அவைக்குறிப்பில் இருந்து அதை நீங்கள் நீக்கவும் செய்திருக்கிறீர்கள்.

வரலாற்றிலேயே எதிர்கட்சி உறுப்பினர்கள் பேசியதை விட அதிகமாக ஆளுங்கட்சி உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் பேசியதை நீங்கள் தான் அவைக்குறிப்பில் இருந்து முதன்முதலாக நீக்கி இருக்கிறீர்கள். அதற்கு எங்களுடைய வாழ்த்துகள். அவை நிகழ்ச்சி எல்லாம் நேரலையில் ஒளிபரப்பப்படுகிறது. கேள்விகள் கேட்டால் நாங்களே ஆச்சரியப்படக்கூடிய அளவிற்கு பதில் சொல்கிறார்கள். இப்போது பாட்டெல்லாம் பாடுகிறார்கள். எங்களுக்கே சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறோமா என்று சந்தேகப்படும் அளவிற்கு பாட்டு நிகழ்ச்சிகள் எல்லாம் நடந்துகொண்டிருக்கிறது. இதை நீங்கள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கினாலும் சமூக வலைதளங்களில் ரீல்ஸாக ஷேர் செய்யப்படுகிறது. உங்கள் பார்வைக்கு மீண்டும் இதைக் கொண்டு வருகிறேன்” என்று பேசியிருக்கிறார்
“மீனவர்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்”- எடப்பாடி பழனிசாமி
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (ஆகஸ்ட் 21) நிதிநிலை அறிக்கை, நீதி, சிறை, சட்டம், எரிசக்தி அறநிலையத்துறைக்கான மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சட்டப்பேரவையில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ” எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் கழிவுகள் கலப்பதால் மீன்கள் கொத்து கொத்தாகச் செத்து மிதக்கிறது. கழிவுகள் ஆற்றில் கலப்பதால், மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. அரசு உடனடியாக தலையிட்டு மீனவர்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்” என்று பேசியிருக்கிறார்
























