சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தைச் சேர்ந்த காவலாளி அஜித்குமார் காவல் மரண கொலை வழக்கில் 6 பேரைக் கைது செய்துள்ள நிலையில், மானாமதுரை டி.எஸ்.பி-யாக இருந்த சண்முகசுந்தரம், திருப்புவனம் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் சிவகுமார், போலீஸ்காரர் இளையராஜா ஆகியோர் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்ய மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து வழக்கறிஞர்கள் நம்மிடம் பேசும்போது, “தற்போதுள்ள நால்வரின் பெயரையும் சி.பி.ஐ தன்னுடைய குற்றப் பத்திரிக்கையில் சேர்த்துள்ளது. அதில், அஜித்குமார் இறப்பதற்கு ஒரு நாள் முன்னதாக திருப்புவனம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லபட்டிருக்கிறார். காவல் நிலைய ஆய்வாளர் அவரைச் சரியாக விசாரிக்காமலும், காவல் நிலையத்திற்கு வந்தது பற்றி ஆவணங்களில் பதிவு செய்யாமல் இருந்துள்ளார்.
மறுநாள் அஜித்குமாரை தனிப்படையினர் 19 இடங்களுக்கு அழைத்துச் சென்று அடித்துச் சித்ரவதை செய்ததனாலேயே இறந்துள்ளார். உடனே அஜித்குமார் காவலில் இருந்து தப்பிக்க முயன்றபோது காயமடைந்து இறந்ததாகப் பொய்யான எப்.ஐ.ஆர் பதிவு செய்தது; காவல்நிலையக் குறிப்பேட்டை மாற்றியமைத்தது; நிகிதா அளித்த புகார் தொடர்பாகப் போடப்பட்ட சி.எஸ்.ஆரை மாற்றி, போலியான ஆவணங்களை உருவாக்கியுள்ளனர் எனத் தெரிவித்திருந்தனர்.

ஆனால் இவற்றையெல்லாம் கூறிய சிபிஐ இதற்கு குறைந்தபட்ச தண்டனை தான் கோரியிருந்தது. இதை மாவட்ட நீதிமன்றம் விசாரித்து கொண்டிருக்கும் போதே இந்த வழக்கிற்குத் தடை விதிக்க வேண்டுமென உயர்நீதிமன்றத்தில் நால்வரும் மனுதாக்கல் செய்தனர்.
























