மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் “சத்ரோன் கி கூஞ்ச்’ (மாணவர்களின் குரல்) என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், பிரதமர் மோடியை மறைமுகமாகக் குறிப்பிட்டு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மற்றும் ஸ்டாண்டப் காமெடியன் புல்கித் மணி ஆகியோர் கிண்டல் செய்யும் வகையில், பிரதமர் மோடி உலக நாடுகளின் தலைவர்களுடன் பேசுவது போல நடித்தனர். அதைத் தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, “நீங்கள் சாதாரணமாக நண்பரின் வீட்டிற்குச் செல்லவில்லை. இந்தியப் பிரதமர் வெறும் நட்பை மட்டும் வளர்க்கும் பணியில் ஈடுபடக் கூடாது. அவர்களுக்கு நட்பில் எந்த நன்மையும் இல்லை.
நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதே அவர்களின் முதன்மையான கடமை” என்று கூறி, மத்திய அரசின் வெளியுறவுத் தூதரக அணுகுமுறையைக் கடுமையாக விமர்சித்திருந்தார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலான நிலையில், பா.ஜ.க தலைவர்கள் பலரும் ராகுல் காந்திக்கு கண்டனம் தெரிவித்திருக்கின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக பேசிய பா.ஜ.க தேசிய செய்தித் தொடர்பாளர் சி.ஆர். கேசவன் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், “ராகுல் காந்தி பெண்களை இழிவுபடுத்தியுள்ளார். நாகரிகமும் சரியான சிந்தனையும் உள்ள எந்தவொரு நபரும் இது போன்ற மூன்றாம் தர அருவருப்பான செயல்களை ரசித்திருக்க மாட்டார்கள்.
























