சென்னை: சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவது, பொதுமக்களும், மீனவர்களும் ஈடுசெய்ய முடியாத இழப்பையும், சிரமத்தையும் ஏற்படுத்தும் என்பதால், அதைக் கைவிட தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.வழக்கறிஞர் ஆர்.எஸ்.தமிழ்வேந்தன் தாக்கல் செய்த மனு, தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி தலைமையிலான முதல் அமர்வு முன், வரும் வாரத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.பட்டினம்பாக்கம் பகுதியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்குச் சொந்தமான இடத்தில் ரூ.1,200 கோடி செலவில் புதிய தலைமைச் செயலகம் கட்டப் போவதாக ஆகஸ்ட் 10ஆம் தேதி செய்திகள் மூலம் தெரிந்துகொண்டதாக மனுதாரர் தெரிவித்தார்.“இந்தச் செய்தியைக் கேட்டதும் நான் அதிர்ச்சியடைந்தேன். உத்தேச இடத்தில் புதிய செயலகம் கட்டப்பட்டால், ஏழைகளுக்கு வீடு வழங்கும் திட்டம் பாதிக்கப்படும். தற்போதுள்ள வீடுகள் சிதிலமடைந்துள்ளதால், அந்த வீடுகளை இடித்துவிட்டு, புதிய வீடுகள் கட்ட பொதுமக்களுக்கு ஒதுக்க வேண்டும்,” என்றார்.பட்டினம்பாக்கம் மீனவ கிராமங்களில் செயலகம் அமைத்தால், மீனவர்கள் நலன் பாதிக்கப்படும்,” என்றார்.அன்றைய திமுக ஆட்சியில் பல கோடி ரூபாய் செலவில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டது ஆனால் பின்னர் வந்த அரசால் மருத்துவமனையாக மாற்றப்பட்டது.“செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள தற்போதைய தலைமைச் செயலகக் கட்டடம், ரயில் நிலையம், சென்னை உயர்நீதிமன்றம், பேருந்து நிலையம், அரசு மருத்துவமனைக்கு அருகாமையில் நல்ல நிலையில் உள்ளது. இந்நிலையில், செயலகத்தை மாற்றினால், பொதுமக்கள் வந்து செல்வதற்கு மிகவும் சிரமப்படுவதோடு, போக்குவரத்து நெரிசலால் அப்பகுதி முழுவதும் கடுமையாகப் பாதிக்கப்படும்” என்று அவர் மேலும் கூறினார்.மாநிலம் நிதி நெருக்கடியில் இருப்பதாக தற்போதைய அரசு அறிவித்துள்ளது என்றார். எனவே, 1,200 கோடி ரூபாய் செலவில் புதிய கட்டடம் கட்டுவதற்குப் பதிலாக, தற்போதுள்ள தலைமைச் செயலக கட்டடத்தை சீரமைத்து பயன்படுத்திக்கொள்ளலாம், என்றார்.
























