விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, பொதுமக்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சரிவர பேருந்து வசதி செய்துதரவில்லை என்ற புகார் கடந்த சில தினங்களாக பரபர செய்திகளாயின.
இந்தச் சூழலில், போக்குவரத்துதுறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபனிடம் நமது கேள்விகளை முன்வைத்தோம்…
“போக்குவரத்துத் துறைக்கு எந்த பிரச்னையும் இல்லை… மக்களுக்கும் பிரச்னை இல்லை. ஏனெனில், போதுமான எண்ணிக்கைக்கும் அதிகமாகவே பேருந்து வசதியை துறை சார்பில் செய்துகொடுத்திருந்தோம்.
ஆனாலும் ஆங்காங்கே நடைமுறையில் ஏற்பட்ட சின்னச்சின்ன பிரச்னைகளைப் பூதாகரப்படுத்தி எதிர்த்தரப்பினர் பொய்யான வீடியோக்களைப் பரப்பி வருகின்றனர்.
“தமிழ்நாடு பீகாராக மாறிவிட்டதா…?’ என்ற தலைப்பில் பஸ் மீது பயணிகள் அமர்ந்து செல்வதுபோன்று கர்நாடகாவிலுள்ள வீடியோ ஒன்றை பரப்பி அரசுக்கு கெட்டப் பெயரை உருவாக்க நினைத்தனர். அதேபோல் பெண் ஒருவர், ‘போதிய பேருந்து வசதி இல்லை’ எனக் கூறுவதான பழைய வீடியோ ஒன்றைப் பரப்பினார்கள்.
ஆனால், சம்பந்தப்பட்ட இடத்துக்கு மட்டுமே நாங்கள் கூடுதலாக 40 பேருந்துகளை இயக்கியிருக்கிறோம். இது குறித்தான எங்கள் தரப்பு விளக்க செய்தியை நாங்கள் வெளியிட்டதும், அந்தப் பெண்ணின் வீடியோவையே இணையத்திலிருந்து நீக்கிவிட்டனர். இதேபோல், அரசுப் பேருந்துக்கு ஆன்லைனில் பதிவு செய்தால், அதிக காசு வாங்குவதாகவும் ஒரு பொய்ச் செய்தி வெளியானது.
இதுபோன்ற பொய்யான செய்திகளால், பயணிகளுக்கு சிரமம் ஏற்பட்டது என்பது போன்ற மாயத்தோற்றத்தை உருவாக்கியிருக்கிறார்களே தவிர… உண்மையில் பயணிகளுக்கு எந்தவித சிரமமும் ஏற்படவில்லை!”
“நீங்கள் சொல்வதுபோல், ஏற்கெனவே முன்பதிவு செய்துவைத்திருந்த டிக்கெட்டுகளை அரசுப் போக்குவரத்துக் கழகமே தன்னிச்சையாக ரத்து செய்துவிட்டதாக ஒரு தம்பி புகார் தெரிவித்திருந்தார்தான். ஆனால், இதுகுறித்து ஆய்வு செய்தபோதுதான், சம்பந்தப்பட்ட அந்தத் தம்பியே டிக்கெட்டுகளை ரத்து செய்திருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்தன. இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் உள்ளிட்ட அனைத்து ஆதாரங்களையும் பத்திரமாக எடுத்து வைத்திருக்கிறோம்.
இதுபோன்ற சமயங்களில், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பது நல்லதல்ல என்பதால், அந்தத் தம்பியை நேரில் அழைத்து அறிவுரை மட்டும் வழங்கியிருக்கிறோம்.”
























