Rahul Gandhi Team Milind Deora Ghulam Nabi Azad Hardik Patel Ashwani Kumar Jyotiraditya Scindia Congress Leaders Who Quit Since 2019 | ‘சிந்தியா முதல் மிலிந்த் தியோரா வரை’ ராகுல் காந்திக்கு ஷாக் கொடுக்கும் தலைவர்கள்

சுதந்திர போராட்டம் காலம் தொடங்கி கடந்த 139 ஆண்டுகளாக இந்திய அரசியலின் மையப்புள்ளியாக காங்கிரஸ் கட்சியே இருந்து வருகிறது. சுதந்திரத்துக்கு பிறகான நேரு காலம் தொடங்கி மன்மோகன் சிங் காலம் வரை, அக்கட்சி பல சவால்களை சந்தித்திருக்கிறது. கட்சியில் பல விஷயங்கள் மாறினாலும், ஒன்று மட்டும் மாறவில்லை. தொடர்ந்து பலவீனம் அடைந்து கொண்டே செல்கிறது. 
தொடரும் பாஜகவின் மிஷன்:
ஒரு காலத்தில் இந்தியா முழுவதும் ஆட்சி நடத்திய கட்சி தற்போது 3 மாநிலங்களில் மட்டுமே ஆட்சியில் உள்ளது. அதில், இரண்டு தென்னிந்திய மாநிலங்கள். குறிப்பாக, வட இந்தியாவில் பாஜகவின் அரசியலை எதிர்த்து அரசியல் செய்ய முடியாமல் தவித்து வருகிறது. கொள்கை ரீதியாக காந்தியின் கட்சியாக இருந்தது தற்போது, கொண்ட கொள்கையில் நிலையில்லாமல் இருக்கிறது.
அதற்கு நேர் எதிராக அசுர வளர்ச்சி அடைந்துள்ளது பாஜக. இவ்வளவு நாள் எந்த கட்சி தங்களுக்கு அதிகாரத்தை கொடுத்ததோ அதே கட்சியை விட்டு தலைவர்கள் வெளியேறுவது தொடர் கதையாகி வருகிறது. ஒரு சிலரை தவிர்த்து மற்ற அனைவரும் கொள்கைக்கு நேரான கட்சியுடனே கைகோர்த்துள்ளனர்.
கடந்த 2014ஆம் ஆண்டுக்கு பிறகு நடந்த தேர்தல்களில் தொடர் தோல்வியை சந்தித்த காரணத்தால் காங்கிரஸ் கட்சியில் இருந்து பல தலைவர்கள் வெளியேறியுள்ளனர். குறிப்பாக, 2019ஆம் ஆண்டு, தொடர்ந்து இரண்டாவது முறையாக பாஜக வெற்றிபெற்றதை தொடர்ந்து, ராகுல் காந்திக்கு நெருக்கமாக கருதப்பட்ட பல தலைவர்கள் கட்சியில் இருந்து வெளியேறியுள்ளனர். அவர்கள் யார்? யார்? எந்த கட்சியில் சேர்ந்துள்ளார்கள் என்பதை இந்த தொகுப்பில் காணலாம்.
ஜோதிராதித்ய சிந்தியா:
ராகுல் காந்திக்கு நெருக்கமானவர்களில் ஒருவராக கருதப்பட்ட மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஜோதிராதித்ய சிந்தியா, கடந்த 2020ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலக பாஜகவில் இணைந்தார். சிந்தியா ஆதரவு எம்எல்ஏக்களும் அவருடன் சேர்ந்து பாஜகவில் இணைந்த காரணத்தால் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது. பாஜகவில் இணைந்த அவருக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
அம்ரீந்தர் சிங்:
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அம்ரீந்தர் சிங், பஞ்சாப் மாநிலத் தேர்தலுக்கு ஒரு சில மாதங்களுக்கு முன்பு, 2021ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம், மாநில முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். தன்னை காங்கிரஸ் அவமானப்படுத்திவிட்டதாக சொல்லி கட்சியில் இருந்து வெளியேறினார். பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்ற கட்சியையும் தொடங்கி, பஞ்சாப் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டார். கடந்த 2022ஆம் ஆண்டு, காங்கிரஸிலிருந்து விலகி கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்குப் பிறகு, பாஜகவுடன் தனது கட்சியை இணைத்தார்.
ஜிதின் பிரசாத்:
ஒரு காலத்தில் ராகுல் காந்திக்கு நெருக்கமானவராக கருதப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சரான ஜிதின் பிரசாத், உத்தரப் பிரதேச தேர்தலுக்கு ஒரு வருடம் முன்பு 2021 இல் பாஜகவில் இணைந்தார். உத்தர பிரதேச காங்கிரஸின் முகமாக இருந்து வந்த அவர், பாஜகவில் இணைந்ததை தொடர்ந்து, மாநில அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
அஸ்வனி குமார்:
முன்னாள் மத்திய அமைச்சரான அஸ்வனி குமார், பஞ்சாப் தேர்தலுக்கு ஒரு சில நாட்களுக்கு முன்பு, 2022ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம், காங்கிரஸில் இருந்து விலகினார். கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் மூத்த அமைச்சர்களில் ஒருவராக பதவி வகித்தவர். 2019 தேர்தலில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து கட்சியை விட்டு வெளியேறினார்.
ஹர்திக் படேல்:
குஜராத்தில் படேல் சமூக தலைவராக தலைவராக இருந்த ஹர்திக் படேல், கடந்த 2022ஆம் ஆண்டு மே மாதம், காங்கிரஸில் இருந்து விலகினார். ராகுல் காந்தியால் கட்சியில் சேர்க்கப்பட்ட ஹர்திக் படேல், ராகுல் காந்தி மீது கடுமையான குற்றச்சாட்டுகளை சுமத்திவிட்டு காங்கிரஸில் இருந்து வெளியேறினார். ஒரு மாதம் கழித்து பாஜகவில் இணைந்தார்.
குலாம் நபி ஆசாத்:
காங்கிரஸ் கட்சியின் மிக மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்தவர் குலாம் நபி ஆசாத். கட்சியிலும் ஆட்சியிலும் பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார். ஒன்றிணைந்த ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முதலமைச்சராக பதவி வகித்தவர். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக பதவி வகித்தவர். மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவராக பதவி வகித்தவர்.
காங்கிரஸ் கட்சியில் சீர்திருத்தம் கொண்டு வர வேண்டும் என கோரி சோனியா காந்திக்கு கடிதம் எழுதிய 23 தலைவர்களில் ஒருவர். தொடர் தோல்விக்கு ராகுல் காந்தியின் முதிர்ச்சியின்மையே காரணம் எனக் கூறி, காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறினார். அவர் இப்போது, ஜனநாயக முற்போக்கு ஆசாத் என்ற பெயரில் கட்சி தொடங்கி நடத்தி வருகிறார்.
மிலிந்த் தியோரா:
காங்கிரஸ் மூத்த தலைவர் முரளி தியோராவின் மகன் தான் மிலிந்த் தியோரா. கடந்த 2004 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் மும்பை தெற்கு தொகுதியில் போட்டியிட்டு மக்களவைக்கு தேர்வானார். தொடர்ந்து 2014 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் சிவசேனா தலைவர் அரவிந்த் சாவந்துக்கு எதிராக போட்டியிட்டு இரண்டாவது இடத்தை பிடித்தார்.
2012 மற்றும் 2014ம் ஆண்டு காலகட்டத்தில் மத்திய தகவல் மற்றும் தொலைதொடர்புத்துறை இணையமைச்சராக இருந்துள்ளார். மும்பை மாநகர காங்கிரஸ் தலைவராகவும் இவர் இருந்துள்ளார். எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் மும்பை தெற்கு தொகுதியை தங்களுக்கு ஒதுக்க வேண்டுமென, I.N.D.I.A. கூட்டணியில் உள்ள உத்தவ் தாக்கரே தரப்பிலான சிவசேனா கோரி வருகிறது. ஆனால், இதற்கு கடும் அதிருப்தி தெரிவித்து வந்த நிலையில், மிலிந்த் தியோரா தற்போது காங்கிரசில் இருந்து வெளியேறியுள்ளார். 
 

Source link