வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக 370 இடங்களிலும், தேசிய ஜனநாயகக் கூட்டணி 400 இடங்களிலும் வெற்றி பெற்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். மேலும் வரும் மக்களவைத் தேர்தலுக்குள் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.
400 இடங்களில் வெற்றி பெறுவோம்:
எக்னாமிக்ஸ் டைம்ஸ் நவ் நடத்திய வணிக மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய மத்திய உள்துறை அமைச்சர், மக்களவைத் தேர்தல் முடிவு குறித்து எங்களுக்கு எந்தவிதமான சந்தேகமும் இல்லை. காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகள் மீண்டும் எதிர்க்கட்சிகள் வரிசையில் அமர வேண்டியதை மனதளவில் உணரத் தொடங்கிவிட்டனர்.
அரசியலமைப்புச் சட்டத்தின் 370வது பிரிவை நாங்கள் ரத்து செய்துள்ளோம் அதாவது இது ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கியது. எனவே நாட்டு மக்கள் பாஜகவுக்கு 370 இடங்களையும், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 400 இடங்களுக்கும் வெற்றி பெற வாக்களிப்பார்கள் என நாங்கள் நம்புகிறோம். அதே நேரத்தில் ஜெயந்த் சவுத்ரி தலைமையிலான ராஷ்டிரிய லோக்தளம் (ஆர்எல்டி), சிரோமணி அகாலி தளம் (எஸ்ஏடி) மற்றும் சில மாநிலக் கட்சிகள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (என்டிஏ) இணைவதற்கான சாத்தியக்கூறுகள் தேர்தல் நெருங்கும்போதுதான் தெரியவரும்.
பொருளாதார மீட்டெடுப்பு:
2024 தேர்தல் என்.டி.ஏ மற்றும் I.N.D.I.A எதிர்க்கட்சிகளுக்கு இடையிலான தேர்தலாக இருக்காது, மாறாக வளர்ச்சி மற்றும் வெறும் கோஷங்களை கொடுப்பவர்களுக்கு இடையிலான தேர்தலாக இருக்கும். அயோத்தியில் ராமர் கோவில் , ராமர் பிறந்த இடத்தில் கோவில் கட்டப்பட வேண்டும் என்று 500-550 ஆண்டுகளாக நாட்டு மக்கள் நம்பி வந்தனர். சமாதான அரசியலாலும், சட்டம்-ஒழுங்கைக் காரணம் காட்டி ராமர் கோவில் கட்ட அனுமதிக்கப்படவில்லை. ஆனால் தற்போது ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது.
கடந்த 2014ஆம் ஆண்டு பொருளாதாரம் மோசமான நிலையில் இருந்தது, எல்லா இடங்களிலும் மோசடிகள் இருந்தன, வெளிநாட்டு முதலீடுகள் வரவில்லை, அந்த நேரத்தில் நாம் ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிட்டிருந்தால், அது உலகிற்கு தவறான செய்தியை கொடுத்திருக்கும். ஆனால், 10 ஆண்டுகளுக்குப் பிறகு, பாஜக அரசு பொருளாதாரத்தை மீட்டெடுத்து, அன்னிய முதலீட்டைக் கொண்டு வந்துள்ளது, ஊழல் எதுவும் இல்லை. எனவே வெள்ளை அறிக்கை வெளியிட இதுவே சரியான தருணம்.
குடியுரிமை திருத்தச் சட்டம்:
குடியுரிமை திருத்தச் சட்டம் கடந்த, 2019 இல் இயற்றப்பட்ட சட்டம், இது தொடர்பான விதிகளை வெளியிட்ட பிறகு, மக்களவைத் தேர்தலுக்கு முன் செயல்படுத்தப்படும். எங்கள் முஸ்லிம் சகோதரர்கள் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள் மற்றும் தூண்டப்படுகிறார்கள் (சிஏஏவிற்கு எதிராக). பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் துன்புறுத்தலுக்கு உள்ளாகி இந்தியாவிற்கு வந்தவர்களுக்கு குடியுரிமை வழங்குவதற்காக மட்டுமே சிஏஏ உள்ளது. இது யாருடைய இந்திய குடியுரிமையையும் பறிப்பதற்காக அல்ல” எனவும் கூறினார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை குறித்த கேள்விக்கு , 1947-ல் நாட்டைப் பிரித்ததற்கு அவரது கட்சி காரணமாக இருந்ததால், நேரு-காந்தி வாரிசுகளுக்கு இதுபோன்ற அணிவகுப்பை நடத்த உரிமை இல்லை என பதில் அளித்துள்ளார். .
மேலும் காண








































































































