வயநாடு நிலச்சரிவு உயிரிழப்பு 264 ஆக அதிகரிப்பு… 

கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 264 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்திய கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்திற்குட்பட்ட முண்டக்கை பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில், மண்ணுக்குள் புதைந்த வீடுகளில் வசித்து வரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கனமழை காரணமாக மீட்பு பணிகள் மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டாலும், ராணுவம், தேசிய பேரிடர் மீட்பு படை உள்ளிட்ட பாதுகாப்பு படையினர் கடும் முயற்சிக்கிடையே மீட்பு பணிகளை தொடர்ந்து வருகின்றனர்.

மண் அள்ளும் எந்திரம் மற்றும் கனரக வாகனங்களை கொண்டு செல்ல வசதியாக டெய்லி பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. ராணுவத்தினர் இந்த கட்டுமான பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இரவிலும் கட்டுமானப் பணி நடைபெற்று வருவதால் இன்று மதியத்திற்குள் பாலத்திற்கான பணி நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. வயநாடு மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

இதனால் பொதுமக்கள் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுவரை 264 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இன்னும் 240 பேர் குறித்த விபரங்கள் தெரியவில்லை என அவர்களது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.