மூன்றாவது டெஸ்ட் போட்டி:
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று பிப்ரவரி 15 ஆம் தேதி குஜராத் மாநிலம் ராஜ்கோட் சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக யஜஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கேப்டன் ரோகித் சர்மா ஆகியோர் களம் இறங்கினார்கள். இதில் இங்கிலாந்து அணி வீரர் மார்க் வுட் வீசிய பந்தில் யஜஸ்வி ஜெய்ஸ்வால் விக்கெட்டை பறிகொடுத்தார். 10 பந்துகள் களத்தில் நின்ற அவர் 2 பவுண்டரிகள் உட்பட 10 ரன்கள் எடுத்தார். மறுபுறம் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா சிறப்பாக விளையாடினார்.
அப்போது களம் இறங்கிய சுப்மன் கில் டக் அவுட் ஆக, பின்னர் வந்த ராஜத் படிதர் 5 ரன்களில் நடையைக்கட்டினார். இதனிடையே ரவீந்திர ஜடேஜாவுடன் ஜோடி சேர்ந்த ரோகித் சர்மா 196 பந்துகள் களத்தில் நின்ற 14 பவுண்டரிகள் 3 சிக்ஸர்கள் உட்பட 131 ரன்களை குவித்தார். அதேபோல் ரவீந்திர ஜடேஜாவும் சிறப்பாக விளையாடினர். அவருடன் அறிமுக வீரராக களம் இறங்கிய சர்ஃப்ராஸ் கான் ஜோடி சேர்ந்தார். அதன்படி, இந்த போட்டியின் மூலம் தன்னுடைய அறிமுக அரைசதத்தை பதிவு செய்தார் சர்ஃபராஸ் கான்.
ஜடேஜாவின் செயல்:
முன்னதாக போட்டி ஆரம்பித்த போது பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்த மைதானம் நேரம் ஆக ஆக தொய்வாக மாறி பேட்ஸ்மேன்களுக்கு சிரமத்தை கொடுத்தது. அதேநேரம் அதிரடியாக விளையாடி வந்த சர்ஃபராஸ் கான் சதம் விளாசும் பட்சத்தில் கண்டிப்பாக இந்திய அணியின் ஸ்கோர் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 400-ஐ தொட்டு விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இதுவெல்லாம் ஜடேஜாவின் செயலால் தவிடுபொடியானது. அந்த வகையில் ஜடேஜா 99 ரன்கள் எடுத்த போது 1 ரன்னை எடுத்து சதத்தை பதிவு செய்வதற்கு திணறிக்கொண்டிருந்தார். அப்போது வீசப்பட்ட பந்தை அடித்த ஜடேஜா 100 வது ரன்னை எடுக்க பாதி தூரம் வரையில் ஓடி வந்து விட்டார். ஜடேஜா ஓடிவருவதை பார்த்த சர்ஃப்ராஸ் கானும் பந்து எங்கே செல்கிறது என்பதை கவனிக்காமல் பாதி தூரம் ஓடிவிட்டார். அப்போது பந்து பில்டரின் கையில் சென்றதை உணர்ந்த ஜடேஜா அப்படியே நின்றுவிட்டார்.
தொப்பியை கழட்டி வீசிய ரோகித் சர்மா:
ஜடேஜாவின் இந்த செயலால் பாதியிலே சிக்கிக் கொண்டு மீண்டும் கிரீசுக்கு செல்வதற்கு முன்பு ரன் அவுட் ஆனார் சர்ஃபராஸ் கான். இதனால் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
Rohit sharma was not happy with Jadeja…. #INDvsENGTest #INDvENG #SarfarazKhan pic.twitter.com/IixlTG3e7Q
— SadhuWeatherman (@abhiramsirapar2) February 15, 2024
இந்த செயலை பார்த்த கேப்டன் ரோகித் சர்மா தலையில் கை வைத்துக்கொண்டு தன்னுடைய தொப்பியை கடும் கோவத்துடன் தூக்கி எறிந்து ஏதோ சில வார்த்தைகளில் திட்டினார். அதன் பிறகு மைதானத்தில் இருந்து பெவிலியனுக்கு திரும்பிய சர்ஃபராஸ் கானிடம் இனி எதிரில் இருக்கும் பேட்ஸ்மேனை நம்பாமல் பந்து பில்டரின் கையில் செல்கிறதா என்பதை பார்த்துக்கொண்டு ஓடுங்கள் என்பது போன்ற அறிவுரையை கூறினார். இதனிடையே ரோகித் சர்மா கோவத்தில் தொப்பியை தூக்கி எறிந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைதலங்களில் வைரலாகி வருகிறது.
மேலும் படிக்க: Rohit Sharma Record: டெஸ்ட் போட்டியில் சரவெடி…தோனியை பின்னுக்குத்தள்ளிய ஹிட்மேன் ரோஹித் ஷர்மா!
மேலும் படிக்க:IND vs ENG 3rd Test: ரோஹித் – ஜடேஜா சதம்.. சர்ஃப்ராஸ் கான் அரைசதம்! 326 ரன்களை குவித்த இந்தியா!