ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்ற தமிழக அரசின் நிலைப்பாட்டிற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும் என தமிழ்நாடு வணிகர்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டத்தினை சேர்ந்த மண்டல கூட்டம், மண்டல தலைவர் வைகுண்ட ராஜன் தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கலந்துகொண்டார். இந்த மண்டல கூட்டத்தில் வரும் மே 5-ஆம் தேதி நடைபெறவிருக்கும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில மாநாடு குறித்தும், வணிகர்களின் பிரச்சினைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்தும் பல்வேறு ஆலோசனைகள் நடத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா பேசுகையில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் மாநில மாநாடு வரும் மே 5-ஆம் தேதி ஈரோட்டில் நடைபெற இருக்கின்றது. இந்த மாநாட்டில் வணிகர்களின் உரிமைகள் குறித்து மத்திய, மாநில அரசுக்கு வலியுறுத்த உள்ளோம். இந்த மாநாட்டில் 25-ஆயிரம் பேர் கலந்துகொள்ள இருக்கின்றனர் என்று தெரிவித்தார்.
மேலும் வாகன சோதனை என்ற பெயரில் இ-இன்வாய்சில் சிறுசிறு குறைகள் இருப்பினும் அதனை பெரிதாக்கி அபராதம் விதிக்கும் முறை உடனடியாக திருத்தப்பட வேண்டும். தொடர்ந்து ஆன்லைன் சூதாட்டம் மூலம் வணிகர்கள், இளைஞர்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே அதனை மத்திய அரசு உடனடியாக கவனம் செலுத்தி தடைசெய்ய வேண்டும். ஆன்லைன் ரம்மி விளம்பரம் நடிக்ககூடிய நடிகர்கள் சம்பளம் வாங்கி கொண்டு நடிக்கின்றார்கள். அது அவர்கள் தொழில், ஆனால் ஆன்லைன் ரம்மி தடை விவகாரத்தினை மத்திய அரசு முடிவு செய்து ஆன்லைன் ரம்மியை தடைசெய்ய வேண்டும்.
ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தை பொறுத்தவரையில் வணிகர் சங்கத்தின் பேரமைப்பின் நிலைப்பாடு என்பது தனிநபருக்கு துணைபோவது இல்லை. ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளது. எனவே அதன் தீர்ப்பு வந்த பிறகு எங்கள் முடிவை சொல்கின்றோம். ஆனால் வணிகர் சங்கத்தின் பேரமைப்பை பொறுத்தவரையில் தமிழகத்தில் எந்தஒரு நிறுவனமும் மூடப்படக் கூடாது திறக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் பகுதியில் மூடிக்கிடக்கும் ஸ்பின்னிங் மில்லை திறக்கவும் தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைக்க உள்ளோம்.
இரவு நேரக் கடைகளை பொறுத்தவரையில் காவல்துறையினரால் வணிகர்களுக்கு பாதிப்பு வந்தால் டிஜிபி-யிடம் தெரிவித்து நடவடிக்கைகள் எடுக்க தயங்கமாட்டோம் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தெரிவித்தார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
For more news update stay with actp news
Android App
Facebook
Twitter
Dailyhunt
Share Chat
Telegram
Koo App