ஓபிஎஸ் அதிமுக ஒருங்கிணைப்பாளர் கிடையாது என எடப்பாடி பழனிசாமி கடிதம் மூலம் திட்டவட்டமாக தெளிவுபடுத்தியுள்ளார்.
உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அதிமுகவினருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க ஒப்புதல் வழங்கக்கோரி இபிஎஸ்க்கு ஓபிஎஸ் கடிதம் எழுதினார். ஆனால், அதனை வாங்க இபிஎஸ் மறுத்துவிட்டதாக ஒபிஎஸ் தரப்பு குற்றம் சாட்டியது. இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது:
அன்புள்ள அண்ணன் அவர்களுக்கு வணக்கம்
தங்களின் 29.06.2022 ஆம் தேதியிட்ட கடிதம் பத்திரிகைகளின் வாயிலாகத் தெரிந்துகொண்டேன். பின்னர், திரு.மகாலிங்கம் அவர்கள் வழியாகப் பெறப்பட்டது.
கடந்த 23.06.2022 அன்று நடைபெற்ற கழகப் பொதுக்குழுவில் 1.12.2021அன்று நடைபெற்ற கழக செயற்குழுவால் கொண்டுவரப்பட்ட கழக சட்ட திட்ட திருத்தங்கள் அங்கீகரிக்கப்படவில்லை. ஆதலால் அந்த சட்ட திட்ட திருத்தங்கள் காலாவதி ஆகிவிட்டது. எனவே கழக ஒருங்கிணைப்பாளர் என்ற உணர்வில் தாங்கள் எழுதியுள்ள கடிதம் செல்லத்தக்கதல்ல.
மேலும், உள்ளாட்சி அமைப்புகளில் தற்போது காலியாக இருக்கும் பதவிகளுக்கு நடைபெற உள்ள தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு கடைசி நாள் 27.06.2022 அன்று முடிவுற்ற நிலையில் இத்தனை நாட்கள் பொறுத்திருந்த கழகத்தின் வேட்பாளர்களை அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத நிலையிலும், 27.06.2022 அன்று கூட்டப்பட்ட தலைமைக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்திறு தாங்க் உட்பட அனைவருக்கும் முறையாக தகவல் தெரிவிக்கப்பட்டு, மொத்தம் உள்ள 74 தலைமைக் கழக நிர்வாகிகளில் 65 பேர் கலந்து கொண்டனர். தாங்கள் அந்தக் கூட்டத்தை புறக்கணித்த நிலையில் தற்போது தங்களின் இந்தக் கடிதம் ஏற்புடையதாக இல்லை.
அதே போல், நாம் இருவரும் கூட்டாக அழைப்பு விடுத்த, கழகத்தின் பொதுக்குழுவை நடத்தவிடாமல் தடுத்து நிறுத்துவதற்காகத் தாங்கள், ஆவடி காவல் ஆணையருக்கு கடிதம் மூலம் புகார் அளித்தும், நீதிமன்றங்களின் மூலம் வழக்குகளைத் தாக்கல் செய்தும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திஐ செயல்படாத நிலைக்கு கொண்டு செல்வதற்கான அனைத்து பணிகளையும் செய்துவிட்டு, தற்போது இப்படி ஒரு கடிதத்தை எனக்கு அனுப்புவது ஏற்புடையதாக இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்படிக்கு
எடப்பாடி k.பழனிசாமி
கழக தலைமை நிலையச் செயலாளர்
இவ்வாறு அந்த கடித்தில் கூறியுள்ளார்.