புதுச்சேரி: “ரூ.1 லட்சம் நிவாரணம் தர வேண்டும் என்பதால் கரோனா உயிரிழப்புகளை மத்திய அரசு மூடி மறைக்க பார்க்கிறது” என்று புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “கரோனாவால் இதுவரை 5 லட்சத்து 20 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆனால், கரோனா நேரத்தில் உத்தரப் பிரதேசம், டெல்லி, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் ஆக்சிஜன் இல்லாமலும், சரியான மருத்துவ உள்கட்டமைப்பு வசதி இல்லாமலும் பலர் உயிரிழந்ததைப் பார்க்க முடிந்தது. மருத்துவமனைகளுக்கு வெளியே ஆக்சிஜன் கிடைக்காமல் சாலையிலேயே உயிரிழந்த சம்பவங்கள் நடந்தது. கரோனாவால் உயிரிழந்தோர் உடலை புதைக்க வழியில்லாமல், கங்கை ஆற்றின் கரைகளிலும், ஆற்றுக்குள்ளும் சடலத்தை வீசியதாக தகவல் வெளியானது. உலக சுகாதார நிறுவனம் 40 லட்சத்து 20 ஆயிரம் பேர் வரை இறந்திருக்கலாம் என கூறுகிறது.
அதேபோல், ஒரு தனியார் தணிக்கை அமைப்பும், பிரபல அமெரிக்க பத்திரிகையும் இந்த தகவலை உறுதி செய்துள்ளது. இதனையெல்லாம் மத்திய அரசு மறுத்து வருகிறது. இந்தியாவில் வறுமை கோட்டுக்கு கீழ் இருப்பவர்கள் எண்ணிக்கை, மதக் கலவரங்கள் உண்டாகும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பது போன்ற அறிக்கைகளை பாஜக அரசு மறுப்பதுபோலவே, இதனை மறுக்கிறது.
இதில், உண்மை நிலவரம் தெரிய வேண்டுமானால் அனைத்து கட்சிகள் அடங்கிய அமைப்பை ஏற்படுத்தி விசாரணை நடத்த வேண்டும். கரோனா உயிரிழப்பை மத்திய அரசு குறைத்து கூற காரணம், உயிரிழந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் மத்திய அரசு நிவாரணம் கொடுக்க வேண்டும் என்பதால் இதனை மூடி மறைக்க பார்க்கிறது.
புதுச்சேரிக்கு அமித் ஷா வருகை தந்தார். மாநில அரசின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். புதுச்சேரிக்கு புதிய திட்டங்கள் கிடைக்கும் என மக்கள் எதிர்பார்த்தனர். அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. நான் ஏற்கெனவே கூறியது போல, புதுச்சேரியில் தற்போது சட்டம் ஒழுங்கு மிக மோசமாக மாறி வருகிறது.
வெடிகுண்டு காலசாரம் அதிகரித்து வருகிறது. முதல்வர் அலுவலகம் உட்பட அமைச்சர்களின் அலுவலகம் புரோக்கர்களின் கூடாரமாக மாறியுள்ளது. ஊழல் மலிந்த அரசாக என்ஆர் காங்கிரஸ், பாஜக கூட்டணி அரசு உள்ளது. நான் ஒரு நினைவஞ்சலி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசும்போது, காங்கிரஸ் கட்சிக்கு துரோகம் செய்துவிட்டு போனவர்கள், நடுத்தெருவில் நிற்கிறார்கள் என்று கூறினேன். அதற்கு பதிலளித்து பேசிய ஒருவர், நான் தோல்வி பயத்தால் தேர்தலில் நிற்கவில்லை. ஆளுநருடன் இணக்கமாக இல்லாததால் மாநில வளர்ச்சி பாதிக்கப்பட்டதாக கூறினார். நான் தேர்தல் நேரத்தில் மூட்டுமாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டதால் மருத்துவர்கள் அறிவுறுத்தலின் பேரில் ஓய்வில் இருந்த காரணத்தினாலும்,
காங்கிரஸ் தலைவர் ஏவி சுப்ரமணியன் தேர்தலில் போட்டியிட்டதால் பணிகளை ஒருங்கிணைக்க வேண்டி இருந்ததாலும் அகில இந்திய கட்சி தலைமைக்கு தெரிவித்ததன்பேரில் தேர்தலில் போட்டியிடவில்லை. ஆனால், வில்லியனூர் தொகுதியில் 2 முறை வெற்றி பெற்று அமைச்சராக இருந்தவர் ஏன் அந்த தொகுதியில் போட்டியிடவில்லை. அங்கு நின்றால் வெற்றி பெற முடியாது என்ற தோல்வி பயத்தின் காரணமாக மண்ணாடிப்பட்டு தொகுதிக்கு போனார். அவர் என்னை பற்றி பேசுவதற்கு எந்த தகுதியும் இல்லை.
கிரண் பேடிக்கு எதிராக போராட்டம் நடத்தியபோது, அவர் ஏன்? அதில் கலந்து கொண்டார். அவர் ராஜினாமா செய்துவிட்டு போக வேண்டியது தானே. எங்கெல்லாம் பசுமையாக இருக்கிறதோ, அங்கு சென்றுவிடுவார். அவர் காங்கிரஸ் கட்சிக்கு 5வது கட்சியாக வந்தார். எங்கு வாய்ப்பு இருக்கிறதோ அங்கு நிற்பார், பாஜகவுக்கு போயிருக்கும் அவர் அடுத்த தேர்தலுக்கு எந்தக் கட்சிக்கு செல்வார் என தெரியவில்லை. இத்தனை கட்சிகள் மாறி வந்தாலும், அவருக்கு தலைவர் பதவியை கொடுத்து அழகு பார்த்த காங்கிரஸ் கட்சிக்கு துரோகம் செய்தவர் அவர்.
முதல்வர் ரங்கசாமி அரசு எடுத்த தவறான முடிவுகளால் தான் உள்ளாட்சி தேர்தல் தள்ளிப்போயுள்ளது. பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோருக்கு உரிய ஒதுக்கீடு வழங்கி உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும். அதுதான் உண்மையான சமூக நீதியாக இருக்கும். பெட்ரோல், டீசல், கியாஸ் விலையை உயர்த்தியது தான் மோடி அரசின் சாதனை.” என்று நாராயணசாமி கூறியுள்ளார்.
For more news update stay with actp news
Android App
Facebook
Twitter
Dailyhunt
Share Chat
Telegram
Koo App